"தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி.. காரணமே திமுக தான்.!" ஒரே போடாக போட்ட நடிகை கஸ்தூரி! பரபர பேச்சு
தஞ்சை: நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி தொடர்பாகப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி தமிழக அரசியல் குறித்தும் தனது மனதுக்குப்பட்ட கருத்துகளை வெளிப்படையாகக் கூறி வருகிறார்.
இந்தச் சூழலில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, ஆர்எஸ்எஸ் வளர்ச்சி குறித்தும் அமைச்சர் பொன்முடி குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
அந்தர் பல்டி.. ராஜாவை விட இந்து மதம் பெரியது.. சூத்திரர் பற்றிய விமர்சனத்துக்கு நடிகை கஸ்தூரி பதிலடி
நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி இன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென சென்று இருந்தார். மேயர் சன் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாகக் கூறி அவர்களை நேரில் சந்தித்து நடிகை கஸ்தூரி பாராட்டு தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது தான் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
கொச்சைப்படுத்தலாமா
செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, "கடந்த ஆண்டு அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்தது. அது பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் என்பதால் அத்திட்டத்தை வரவேற்று இருந்தோம். ஆனால், இப்போது திமுக அமைச்சரே பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாகக் கூறி கொச்சைப்படுத்தி இருக்கக் கூடாது.
நியாயப்படுத்த முடியாது
யாரும் சொந்த பணத்தில் எதையும் செய்வதில்லை. அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வரிப்பணம் மூலமே நிறைவேறப்படுகிறது. அப்படியிருக்கும் போது, நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வாங்கியுள்ளீர்கள் என்பதே தவறு என்று நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது, அமைச்சர் பொன்முடி இப்படிப் பேசியுள்ளதை யாராலும் நியாயப்படுத்த முடியாது.
ரொம்ப தப்பு
அமைச்சர் பொன்முடி வெளிப்படையாகப் பேசக் கூடியவர் தான். ஆனால், அவர் இப்படிப் பேசியுள்ளது தவறு, அமைச்சர் உட்பட அனைத்து ஆண்களும் ஒன்பது மாதங்கள் எந்தவித பணமும் கொடுக்காமல் பெண்களின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தானே.. எனவே, அனைத்து ஆண்களும் பெண்களை மதித்துப் பேச வேண்டும். உதாசீனப்படுத்திப் பேசக்கூடாது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு
ஒரு செயலை எதிர்க்க எதிர்க்க அது வளரும் என்பார்கள். அப்படித்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தமிழகத்தில் திமுக எதிர்த்து எதிர்த்தே வளர்த்து விடுகிறது. ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து தான் வளர்த்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் மேயராக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இல்லை. இருந்தாலும் பாராட்டும்படி அவர் செயல்படுகிறார்" என்றார்.
ஊர்வலம்
முன்னதாக காந்தி ஜெயந்தி நாளன்று ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டு இருந்தது. அதேபோல விசிக சார்பிலும் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அன்றைய தினம் எந்தவொரு அமைப்பும் பேரணி நடத்த அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதை எதிர்த்து ஆஸ்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.