பாஜக மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக பயப்படாது… முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி பொளேர் கருத்து
தஞ்சை:கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த கட்சியின் மிரட்டலுக்கும் அதிமுக பயப்படாது என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி கூறியிருக்கிறார்.
அதிமுக மற்றும் பாஜக இடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஓரிரு நாளில் மீண்டும் இவ்விரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இந் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த கட்சியின் மிரட்டலுக்கும் அதிமுக பயப்படாது என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியிருக்கிறார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:பாஜக என்ற இயக்கத்தை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா தான். 1998ல் அகில இந்திய அளவில் பாஜகவோடு எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை.
ஆனால் ஜெயலலிதா தான் பாஜகவை அழைத்து, பாமகவையும் அழைத்து தேர்தல் கூட்டணி வைத்தார் .அவரது செல்வாக்கால் மிகப் பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தார்கள்.
இந்திய ஆட்சி வரலாற்றில் முதல்முறையாக ... பெரும்பான்மையுடன் காங்கிரசுக்கு மாற்று பாஜகதான் அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட வரலாறு உள்ள இயக்கம் தான் அதிமுக... எனவே எந்த கட்சியை பற்றியும் பயப்படாது, எந்த கட்சியை பற்றியும் கவலைப்படாது என்று தெரிவித்தார்.