மத்திய அமைச்சரவையில் இடம்? அப்படி ஒரு எண்ணமே இல்லை.. வைத்திலிங்கம் அறிவிப்பின் பரபர பின்னணி
தஞ்சை: அஇஅதிமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுமா என்ற கருத்து குறித்து எதுவும் தெரியாது. அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று ராஜ்யசபா எம்பியும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்க, பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாகவும் அதில் தனது மகன் ரவீந்திரநாத்குமாருக்கு வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தியதாகவும் செய்திகள் ஊடகங்களில் கசிந்தன.
அதே நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, மூத்த தலைவராக உள்ள வைத்திலிங்கத்துக்கு தான் மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென மோடியிடம் கூறியிருந்ததாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அப்போது எதுவுமே நடக்கவில்லை. அப்படியே அந்த விஷயம் அமுங்கி போனது.
4 காலியிடங்கள்
சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் அதிகரித்துள்ளது. மூத்த அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு, அகாலிதளம் கட்சி அமைச்சர் பதவி விலகல் என 4 அமைச்சர் பதவிக்கு காலியிடங்கள் காலியாகின. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
பரபரப்பை கிளப்பிய செய்தி
அத்துடன் அதிமுக உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பை கிளப்பின. அதுவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியை ஓபிஎஸ் விட்டுக்கொடுத்த நேரத்தில் இதுபற்றிய செய்திகள் பரவியதால், விவகாரம் சூட்டை கிளப்பியது.
ரவீந்திரநாத்குமார்
இதனிடையே கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோரும் எம்பிக்களாகி இருந்ததால் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தம்பிதுரை, ரவீந்திரநாத் ஆகிய 4 பேருமே மத்திய அமைச்சர் பதவியை விரும்புவதாக அதிமுகவில் பரபரப்பு கிளம்பியது. அதில் கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் எடப்பாடி பழனிசாமி , வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் உள்ளனர்.இதில் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
எனக்கு எண்ணம் இல்லை
இதனிடையே பீகார் தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாம். இதனால் அமைச்சரவையில் தங்களது ஆதரவாளர்களில் ஒருவருக்கு வழங்க எடப்பாடி பழனிசாமியும், தனது மகனுக்கு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும் விரும்பியதாக சொல்லப்பட்டது. ஆனால் இரு பதவி வழங்க முடியாது என்று பாஜக குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டது.. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா என்ற கருத்து பற்றி எனக்கு தெரியாது. இந்த எண்ணம் எனக்கும் கிடையாது என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
நெல் கொள்முதல்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி பேசுகையில். விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்படுவதாக அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை
மத்திய மந்திரி சபையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற எண்ணம் எனக்கு கிடையாது. மத்திய மந்திரி சபையில் அஇஅதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை " இவ்வாறு கூறியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.