பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை.. மேலும் 3 பேர் கைது
ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்: பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறதோ தெரியவில்லை, ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், திரும்பவும் 3 பேர் கைதாகி உள்ளனர்.
திருபுவனத்தில் வசித்து வந்தவர் ராமலிங்கம். இவர் பாமக பிரமுகர், அக்கட்சியின் முன்னாள் நகரச் செயலாளராகவும் இருந்தவர். கல்யாண வீடுகளுக்கு சாமியானா, பந்தல் போடுவது, வாடகைக்கு பாத்திரம் தரும் கடையை நடத்தி வந்தார்.
பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற ராமலிங்கத்தை அங்கிருந்த 2 பேர் மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதமும் முற்றியது.
அரிவாளால் வெட்டியது
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு ராமலிங்கம் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, மர்மகும்பல் ஒன்று இரு கைகளையும் அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றது.
கடையடைப்பு
ராமலிங்கம் உயிரிழந்ததை அடுத்து, திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் கடையடைப்பு, சாலை மறியல் நடந்து, போலீசார் குவிக்கப்பட்டு பதட்ட நிலையே 2 நாளாக நீடித்து வந்தது.
மேலும் 3 பேர்
இந்த படுகொலை தொடர்பாக முகமது ரியாஸ், சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது ராமலிங்கம் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முஹம்மது தவ்ஃபீக், முகம்மது ஹபீஸ் , சையத் பாட்சா ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி சிறை
அவர்களுக்கு முகமூடி அணிவித்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்புக்கே கொண்டு சென்று போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மூவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.