பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்
தஞ்சை: இந்திய பெண்களில் 30 சதவிகிதம் பேர்தான் பெண்மையுடன் இருப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருப்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள்ர். ஆனால் பெண்கள் முன்பு போல் இல்லாததால் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர். அப்படி பெண்மையுடய பெண்களை தெய்வமாகக் கருதுகிறேன். மேலைநாட்டுப் பெண்களைப் போன்று இந்திய பெண்களும் பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது" என பேசியுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், பெண்கள் குறித்து தனது கருத்துக்களுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், பெண்களை இழிவுபடுத்தி வருவது தமிழ் சமூகத்துக்கு எதிரானது என்றார்.