கஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் வீசிய புயலால் தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. மின் இணைப்பு இன்றி கடும் சிரமத்தை சந்தித்து வரும் டெல்டாவாசிகள் ஜெனரேட்டர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
[மழை, வெயில் தெரியாது.. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின் ஊழியர்கள்.. டெல்டா ஹீரோஸ்! ]
சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதே நேரம் 7 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கஜா புயல் சேத விவகாரங்கள் குறித்து துறை வாரியாக இழப்பீடு மதிப்புகள் கணக்கிடப்பட்டு, மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஊரகப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மின்இணைப்பு சரி செய்வதற்காக புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வந்துள்ளது நினைவிற்குரியது.