காவிரி இனி பாடங்களில் மட்டுமே?.. ஹைட்ரோகார்பனுக்கு அனுமதித்த மத்திய அரசு.. கட்சிகள் கப்சிப்!
தஞ்சாவூர்: பெட்ரோல் என்பது உலக நாடுகளுக்கு கருப்பு தங்கம், விரைவில் தாறுமாறாக விலை ஏறப்போவதால், காவிரிப்படுகையில் கட்டாயம் எண்ணெய் எடுக்க எந்த அரசு வந்தாலும் முயற்சிக்கும். அதற்கு முன்னோட்டமாகவே தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்த கையோடு, 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது காவிரி படுகையில் பெட்ரோல் இருப்பதாக படித்திருப்போம். ஆனால் அதற்கான ஆய்வினை அப்போதெல்லாம் தொடங்கப்படவில்லை.
ஏனெனில் காவிரி தாய் தவழ்ந்த இடமான தஞ்சை டெல்டா தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். "சோழ நாடு சோறுடைத்து" என்ற பழமொழிக்கேற்ப மக்களின் உணவு பஞ்சத்தை தீர்த்து வந்தது.
அக்னி நட்சத்திரம்: மழை வேண்டி தன்வந்திரி பகவானுக்கு 27 நாட்கள் திருமஞ்சன திருவிழா
சதியா-விதியா
இப்படி அள்ள, அள்ள குறையாத அட்சயப்பாத்திரமாக தமிழர்களுக்கு உணவு அளித்து வந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களை வளம் கொழித்த காவிரி, ஆறு ஒரு கட்டத்தில் மழை வந்தால் மட்டுமே தண்ணீர் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது. இது காலத்தின் விதியா அல்லது சதியா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
பள்ளிகளில் பாடங்கள்
தற்போது பல ஆண்டுகளாக மழை வரும் காலங்களில் மட்டும் காவிரி தாய் இதயத்தை நனைத்து செல்கிறார். மற்ற நேரங்களில் கால்களை கூட நனைப்பதில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கு பாதியாக தற்போது அழிந்துவிட்டது. முன்பு ஒரு காலத்தில் தஞ்சையில் விவசாயம் வளம் கொழித்ததாகவும், பின்னாளில் பெட்ரோல் எடுக்கப்பட்ட போது. விவசாயிகள் விவசாயத்துக்காக கடுமையாக போராடியதாகவும் நாளை நம் சந்ததிகள் பள்ளிகளில் பாடங்களாக படிக்கப் போகிறார்கள்.
41 இடங்களில் அனுமதி
ஏனெனில் தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் அல்லது மீதேன் என அழைக்கப்படும் பெட்ரோல் எடுப்பது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் முடிந்த கையோடு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது.
வாய் திறக்கவில்லை
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரனை தவிர பெரிய அளவில் யாரும் குரல் கொடுத்தாக தெரியவில்லை. குறிப்பாக ஆளும் அதிமுகவாகட்டும், எதிர்க்கட்சியான திமுகவாகட்டும்.இதுவரை ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என வாய் திறக்கவில்லை.
லட்சம் கோடிகள்
எனவே வரும் தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ், பாஜக என யார் வந்தாலும் நிச்சயமாக காவிரியில் ஹைட்ரோ கார்பன், மீதேன் என பெட்ரோல் எனப்படும் கருப்ப தங்கத்தை எடுக்கத்தான் போகின்றன. ஏனெனில் காவிரிப்படுகை உள்ள பெட்ரோல் பல லட்சம் கோடிகளை தாண்டும் என்பதால் அதன் மீது பெரும் நிறுவனங்கள் கண் வைத்துள்ளன.
விவசாயம் அழியாது
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் அழியாது என சிலர் வாதிடலாம். ஆனால் அப்படி என்றால் எதற்காக தண்ணீர் காவரி ஆற்றில் வர மறுக்கிறது. யார் தடுக்கிறார்கள். விவசாயம் இருந்தால் காவிரியில் மீதேன் எடுக்க விடமாட்டார்கள் என்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை சாதாரணமாக கடந்துசெல்ல முடியவில்லை.