எப்படியெல்லாம் உதவினோம்.. இப்படி செய்யலாமா சென்னைவாசிகளே.. தஞ்சை இளைஞர் குமுறல்
தஞ்சை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னைவாசிகள் உதவி செய்ய முன்வரவில்லை என்ற குமுறல்கள் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ள நிலையில், 2016ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது கிடைத்த உதவிகளை போல இப்போது கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசிடமிருந்து மட்டுமல்ல, சக மனிதர்களிடமிருந்தும், கேரளா வெள்ளத்திற்கு கிடைத்த உதவி கூட டெல்டா மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக எழத் தொடங்கியுள்ளது.
மனக்குமுறல்
இதுதொடர்பாக 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தினார். அவரது கேள்வி என்பது டெல்டா மக்கள் பலரிடமும் இருக்கும் கேள்விதான்.
தஞ்சை இளைஞர்
அந்த இளைஞர் கூறியது இதுதான்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், தென்னங்குடி கிராமத்திலிருந்து பேசுகிறேன். எங்கள் ஊரை புயல் தாக்கியபோது, நானும், எங்கள் ஊரை சேர்ந்த சில இளைஞர்களும் சென்னையில் இருந்தோம்.
நிதி வசூல்
பாதிப்பு விவரங்களை அறிந்ததும், சென்னையில், முந்தாநாள் காலை முதல், நிதி வசூல் செய்தோம். காலை 6 மணி முதல் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை பகுதிகளில் கிட்டத்தட்ட 500-600 வீடுகள், கடைகளில் பணம் கேட்டோம். மொத்தமாக எங்களுக்கு கிடைத்தது. 500 ரூபாய் மட்டுமே.
சென்னை வெள்ளம்
சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்டபோது, தஞ்சை மாவட்டத்திலிருந்து, காய்கறிகள், டன் கணக்கில் அரிசி, தேங்காய்கள் அனுப்பி வைத்தோம். களத்திலும் எங்கள் இளைஞர்கள் நின்று போராடினார்கள். ஆனால், இப்போது ஏன் சென்னை மக்கள் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பதை மிகப்பெரிய கேள்வியாக அவர்கள் முன்பாக வைக்கிறோம். இவ்வாறு அந்த இளைஞர் கேள்வி எழுப்பினார்.