வலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை மற்றும் பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பல லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு செல்ல இருக்கிறார்கள்.
இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க இன்று போராட்டம் நடந்து வருகிறது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று காலை மக்கள் பேரணியாக சென்றார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் தற்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஏற்கனவே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விவசாயிகள், பெண்கள், காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் பலர் பேரணி நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.