தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா..3 மாதங்களுக்குப் பிறகு முதல் உயிரிழப்பு - தஞ்சை பெண் பலி
தஞ்சாவூர்: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 476 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 221 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,938 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 169 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,18,481 ஆக உள்ளது.
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். இவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான மருத்துவ காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.