கதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்
Recommended Video
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெய் ஆற்றில் கலந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தினர் எண்ணை குழாய் பதித்து அங்கிருந்து எண்ணை எடுத்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள். இந்த குழாய் பதித்து பல ஆண்டுகள் ஆனதால் சமீபத்தில் புதிய குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டுமென அப்போது அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், போலீசாரின், அடக்குமுறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஆற்றில் கலந்தது. தகவல் அறிந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கச்சா எண்ணெய் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி, சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஏற்கெனவே தண்ணீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் இதுபோன்ற பராமரிப்பு பணியின் போது பல விதமான ரசாயனங்கள் உள்ளே செலுத்தப்படுகின்றது. இதனால் குடிநீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியால் ஒட்டுமொத்த மக்களும் அழியும் நிலையும் உருவாகியுள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.