FACT CHECK: அமைச்சர் அன்பில் காருக்காக.. ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டதா? அணைக்கரையில் நடந்தது என்ன?
தஞ்சாவூர்: அணைக்கரை பாலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் வருகைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று காக்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முதலில் தென் மாவட்டங்களில் தொடங்கிய கனமழை தற்போது தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்து வருகிறது. காவிரி கரையோர மாவட்டங்களிலும் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது.
மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடந்த வாரம் 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
கல்லணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றிலும், கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை 100 கோடி செலவில் அமைத்த 'அணைக்கரை பாலம்’ திடீரென இடிந்து விழுந்தது!
அணைக்கரை
இதனால் அணைக்கரை பாலம் கீழேயும் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. அரியலூர் - தஞ்சாவூரை இணைக்கும் பாலம்தான் அணைக்கரை பாலம் ஆகும். இந்த பாலம் மிகவும் பழமையானது. இந்த நிலையில்தான் அணைக்கரை பாலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று காக்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அமைச்சர் மற்றும் அவரின் கான்வாய் உள்ளிட்ட 15 வாகனங்கள் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று நிற்க வைக்கப்பட்டு உள்ளது.
ஆம்புலன்ஸ்
15 வாகனங்கள் செல்லும் வரை ஆம்புலன்ஸ் அங்கேயே காக்க வைக்கப்பட்டது. அமைச்சர் அன்பில் கான்வாய் சென்ற பின்பே ஆம்புலன்ஸ் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். முக்கியமாக வட இந்திய ஊடகங்களில் இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அமைச்சருக்காக நின்ற ஆம்புலன்ஸ் என்று கூறி வடஇந்திய ஊடகங்கள் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றன.
உண்மை என்ன?
ஆனால் உண்மையில் அந்த ஆம்புலன்ஸ் அமைச்சரின் கான்வாய் காரணமாக நிற்க வைக்கப்படவில்லை என்று கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அணைக்கரை பாலம் பழையது. அந்த பாலம் தற்போது ஒரு நேரத்தில் ஒரு வழி பாதையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாலத்தின் அந்த பக்கத்தில் வாகனம் நுழைந்துவிட்டால் எதிர் பக்கம் உள்ள வாகனங்கள் காத்திருக்க வேண்டும். இது பல நாட்களாக நடைமுறையில் இருக்கும் வழக்கம்தான்.
வழக்கம்
இந்த நிலையில்தான் அமைச்சரின் கான்வாய் பாலத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அப்போது அந்த ஆம்புலன்ஸ் அங்கு வரவில்லை. பாலத்தின் பாதி வழியில் கான்வாய் வந்த நேரத்தில்தான் எதிர் திசையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஒருவழி பாதை என்பதால் ஆம்புலன்ஸை பாலத்தில் கொண்டு செல்ல முடியவில்லை. அதற்குள் கான்வாய் பாதி பாலத்தை தாண்டிவிட்டது. கான்வாயை பின்னால் கொண்டு செல்வதை விட பாலத்தை வேகமாக கடப்பதே சரியானது.
என்ன நடந்தது
இதனால் ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டு வேகமாக கான்வாய் கடந்தது. அந்த ஆம்புலன்ஸ் 2 நிமிடங்கள் காத்து இருந்ததாக கூறப்படுகிறது. களத்தில் உண்மையில் நடந்தது இதுதான். ஆனால் அமைச்சரின் வருகைக்காக ஆம்புலன்ஸ் நிற்க வைக்கப்பட்டதாக இது திரித்து கூறப்பட்டு வருகிறது. இந்த அணைக்கரை பாலத்தை பெரிதாக்க வேண்டும். இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.