மதமாற்றத்தை எதிர்த்தால் படுகொலையா.. மனசாட்சி உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.. ராமதாஸ் கண்டனம்
கும்பகோணம்: மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம் என்பவரை 2 பேர் மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதற்கு ராமலிங்கம் மறுக்கவும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது.
போலீசார் குவிப்பு
பிறகு நேற்றிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்று தப்பி சென்றுவிட்டனர். இதனால் திரிபுவனம் பகுதியில் இன மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதற்றம்
மற்றொரு புறம் படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மறியலும், கடையடைப்பு போராட்டமும் இன்று திருபுவனத்தில் நடத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமும் ஏற்பட்டு வருகிறது.
கொடூர கொலை
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த படுகொலையை கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது.
சிறப்பு புலனாய்வு படை
இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். ராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.