கழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.! குமுறும் மக்கள்
தஞ்சை: தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சை அருகே கழிவு நீரில் குடிதண்ணீர் கலக்கும் அவல சம்பவம் அரங்கேறி வருவது மக்களை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே மக்கள் மத்தியில் தினமும் பேசப்படும் பொருளாக உள்ளது தண்ணீர் பற்றாக்குறை. குடிப்பதற்கு, குளிப்பதற்கு என அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காததால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலிக்குடங்களுடன் தொலைதூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மைதானங்களான நீர் நிலைகள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த காரணத்தால் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தமிழக தலைநகரான சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு விட்டன. அதே போல தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக சுமார் 14,900 ஏரிகள் உள்ளதாக கூறப்படுகிறது, இதில் 10,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றிலும் வறண்டு போயுள்ளன.
ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தும் வறண்டு மைதானங்களாக காட்சியளிக்கின்றன.
எங்கே தேடுவது நிலத்தடி நீரை
நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீரை நம்பி தான் மக்களின் பிழைப்பு சென்று கொண்டிருந்தது. மழையே இல்லாமல் நில்லதடி நீர் மட்டும் எவ்வளவு இருக்கும். ஒரு கட்டத்தில் நிலத்தடி நீரும் சரசரவென குறைந்துவிட்டது. சாதாரணமாக 80 முதல் 120 அடிக்குள் கிடைத்து கொண்டிருந்த நிலத்தடி நீர், தற்போது 350 முதல் 400 அடி வரை போர்வெல் அமைத்தால் கூட கிடைப்பதில்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இது தான் நிலை. நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாத ஒரு ஆபத்தான நிலை உருவாகிவிட்டது
தெரு தெருவாக அலையும் அவலம்
மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு கிராம பகுதிகளும் இந்த தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தத்தளிக்கின்றன. லாரி தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால், காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே தண்ணீரை தேடி தெரு தெருவாக அலையும் சூழல் காணப்படுகிறது.
வீணாகும் குடிநீர்
தமிழகமே தண்ணீருக்காக இரவு, பகலாக வேதனைபட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில், தஞ்சை அருகே கழிவு நீரில், குடி தண்ணீர் கலக்கும் அவலம் காணப்படுகிறது. பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு புதிதாக போடப்பட்ட குழாய்கள் காரணமாக, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் பயன்படுத்தும் நீரில், கழிவு நீர் கலந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலட்சிய அதிகாரிகள்
தஞ்சை சாலை கார தெரு பழைய மாரியம்மன் கோயில் சாலை பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகே, குடி தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர் பொதுமக்கள்.
களத்தில் இறங்கிய மக்கள்
அதிகாரிகளிடம் முறையிட்டு, முறையிட்டு ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த மக்கள் தாங்களே குழாய் உடைப்பை சரி செய்து குடிநீரை எடுத்து குடித்து வருகின்றனர். ஆனாலும் இதில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் பிரச்சனையில் கொலை நிகழக்கூடிய அபாய சூழல் உள்ள இந்த காலக்கட்டத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் தேவாமிர்தமான தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவது மக்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.