தஞ்சாவூரில் ஆணவக்கொலை: எங்க பொண்ணு கேட்குதா உனக்கு... இரும்புக்கம்பியால் அடித்துக்கொன்ற பெற்றோர்
தஞ்சாவூர்: சாதி மாறி காதல் திருமணம் செய்த தம்பதியரை 5 நாட்களில் பிரித்து மாப்பிள்ளையை கொடூரமாக கொன்று ஆற்றில் வீசியுள்ளனர் பெண்ணை பெற்றோர். இந்த சம்பவம் திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
என் பையனும், அந்த பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நாங்க பதறிப்போனோம். அந்த பெண்ணை வீட்டுக்குப் போகச்சொன்னோம். ஆனால் கல்யாணம் செய்துக்கிட்ட பெண்ணை எப்படி விட்டுக்கொடுப்பேன்னு சொல்லி அழுதான். நாங்க சரின்னு விட்டுட்டோம் ஆனாலும் வாழ விடாம கொன்னுட்டாங்களே என்று கதறி அழுகிறார் அந்த பையனை பெற்ற தாய்.
நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று சமாதானமாக பேசி கூட்டிட்டு போய் இப்படி கொன்னு கூறு போட்டுட்டாங்களே என்று கதறி துடிக்கிறார் அந்த பையனின் உறவினர். சாதி மாறி காதலித்ததால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞரை நினைத்து கதறிக்கொண்டிருக்கிறது அந்த குடும்பம்.
காதலில் விழுந்த பிரசாத்
கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் பிரசாத் என்பதாகும். இவர் தஞ்சை மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், இலுப்பூர் கோரையூரைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாகவே காதலித்த இந்த ஜோடி ஊர்மக்களின் கண்களை உறுத்தியது.
பறந்த காதல் ஜோடிகள்
காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, சில தினங்களுக்கு முன்பு பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிரசாத் வீட்டிற்கு வந்தார் அந்த பெண். இதனையடுத்து அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு குடும்தோடு ஊரை விட்டு வெளியேறினார் பிரசாத். ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட அந்த ஜோடி, சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.
அழைத்த பெற்றோர்
மனதிற்கு பிடித்த பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதாக தனது பெற்றோருக்கு போன் மூலம் தெரிவித்தார் அந்த பெண். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், வஞ்சகமாக சமாதானமாக பேசினர். சமயபுரத்திற்கு காரில் சென்று பிரசாத்தையும், இளம்பெண்ணையும் காரில் அழைத்து வந்தனர். அதன்பின்னர் எந்த தகவலும் வரவில்லை. பிரசாத்தின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
சடலம் ஒதுங்கியது
நேற்று திருவையாறு அருகே வெண்ணாற்று கரையில் இளம் வயதுடைய ஆணின் சடலம் வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் ஒதுங்கிக்கிடந்தது. அதனைப் பார்த்த கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன பிரசாத் என்று தெரியவந்தது.
கொடூரமாக அடித்துக்கொலை
சமயபுரத்தில் இருந்து இருவரையும் அழைத்துக்கொண்டு வந்த அந்த கும்பல் இளம்பெண்ணை மட்டும் உறவினர் வீட்டில் விட்டு விட்டு பிரசாந்தை தனியாக அழைத்துக்கொண்டு சென்றனர். பணவெளி சுடுகாடு அருகே அழைத்துக்கொண்டு போய் வாயில் துணியைக் கட்டி இரும்புக்கம்பியால் அடித்துக்கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த பிரசாத்தின் சடலத்தை ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
8 பேர் கைது
சம்பந்தப்பட்ட பெண் தங்களின் வீடு தேடி வந்ததால் மட்டுமே திருமணம் செய்து வைத்தோம். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே கொலை செய்தது யார் என்று தெரியவரும் என்று பிரசாத்தின் சகோதரி கூறினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் 8 பேரை கைது செய்துள்ளனர். திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவையாறு சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.