தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை
Recommended Video
ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.
இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
பிரசாரம்
இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார். அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
மோடியின் புகைப்படம்
மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்.
முதியவருடன் தகராறு
அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்.
ஒரத்தநாடு
பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர். முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.