கொசு கடியில் தப்பிக்க மின் விசிறி.. சத்துக்கு கடலை மிட்டாய்! ஸ்பெஷல் கவனிப்பில் ஜல்லிக்கட்டு காளைகள்
தஞ்சை: இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் தஞ்சையில் காளைகளை தயார் செய்து வருகிறார்கள் 'காளையர்கள்'
பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்காக தங்களது காளைகளை தயார் செய்யும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாம் தஞ்சை அருகே ஒரு விசிட் அடித்து, ஜல்லிக்கட்டு காளைகளை தயாரிப்பதை நேரில் பார்வையிட்டோம்.
உணவுகள்
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு உணவாக பருத்திகொட்டை, தவிடு, கல்ல புண்ணாக்கு, உளுத்தம்பொட்டு, துவரம் பொட்டு, நாட்டுபுல், வைக்கோல் ஆகியவை வழங்கப்பட்டு மாடுகளின் கொம்பை போட்டியின் 15 நாட்களுக்கு முன்னதாகவே சீவிவிட்டு மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி, அதிவேக நடைப்பயிற்சி, மண் குத்துதல், மாடு பாய்ச்சல் ஆகிய பயிற்சிக்கு தயார் செய்கின்றனர்.
கடலை மிட்டாய்
மேலும் மாடுகளின் உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை பிரண்டை, பட்ட மிளகாய், சின்ன வெங்காயம், கடலை மிட்டாய் ஆகியவற்றையும் வழங்கி மாடுகளின் உடல் நலத்தையும் பாதுகாத்து , மாடுகளை தங்கள் குழந்தைகள்போல் வளர்த்து எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கில் காளை இனங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிகட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது.
செல்வாக்கு
போட்டியில் பங்கேற்று தங்களது காளைகள் பிடிபடாமல் இருந்தாலே அதற்கு ஒரு செல்வாக்கு உண்டு என்றும், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும் தங்களது மாடுகளை கொண்டு சென்று போட்டியில் பங்கேற்பதற்காகதான் காளைகளை தயார் செய்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர் ஜல்லிகட்டு காளை வளர்க்கும் வீரர்கள்.
கொசுக்கடிப்புக்கு பேன்
தற்போது பனி காலம் என்பதாலும் பூச்சித் தாக்குதல் அதிகம் இருப்பதாலும் மாடுகளுக்கு மின் விசிறிகள் தனியாக பொருத்தியும் பராமரித்து வருகின்றனர்.