தொடர்ந்து 8-வது ஆண்டாக ஏமாற்றம் தந்த ஜூன் 12.. மேட்டூர் அணையை திறக்காததால் சோகத்தில் விவசாயிகள்
Recommended Video
தஞ்சை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் ஜூன் 12-ம் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருவாரூர், தஞ்சாவூர், நாகை , திருச்சி , சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமாா் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும், நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பும், நீர் வரத்தும் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து இன்று குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால், ஜூன் 6-ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நடப்பாண்டையும் சேர்த்து, தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஜூன் மாதம் குறுவைக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகமும் மறுத்து விட்டதால், போதிய நீர் இல்லாமல் குறுவை மட்டுமின்றி சம்பா மற்றும் தாளடியும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில் மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து 8-வது ஆண்டாக ஜூன் 12-ம் தேதி குறுவைக்காக தண்ணீர் திறக்கப்படாதது, டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுப்பது சட்டவிரோதம் என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
இது பற்றி பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், காவிரியில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு உரிய நீரை பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பாண்டிச்சேரி உட்பட 39 மக்களவை தொகுதி உறுப்பினர்களையும் அழைத்து சென்று, காவிரி ஆணையத் தலைவரை சந்தித்து தண்ணீரை பெற்று தரும் பணியை முதல்வர் பழனிசாமி செய்ய வேண்டும்.
மேலும் ராசிமணலில் அணை கட்டுவதற்கான அனுமதியையும் பெற்று தர வேண்டும் என்றார். தமிழகத்தின் உணவு களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா வானம் பார்த்த பூமியாக மாறி வருவது வேதனை அளிப்பதாக குமுறினார் பாண்டியன். கோதாவரி- காவிரி இணைப்பால் காவிரி டெல்டாவிற்கு எந்த உபயோகமும் இல்லை. காவிரி நீர் மூலம்தான் குடிநீர் மற்றும் பாசன தேவை பூர்த்தியாகிறது. ஆதலால் காவிரிக்கு மாற்று காவிரியே. எனவே ராசிமணலில் அணை கட்டிடும் வரை போராடுவோம் என்றார்.