ஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி
தஞ்சை: திமுக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் தஞ்சை மகாராஜா திருமண மகாலில் இன்று நடந்தது.
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., செ.ராமலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.பி. ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து பேசினார். அவர் தனது உரையில் கூறியதாவது: அரசியல் என்பது உடல் என்றால் விவசாயம் என்பது உயிர், உயிரற்ற உடல் செயல்படுவது என்பது முடியாத காரியம்.
எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. மேட்டூர் அணை சரியான காலகட்டத்தில் திறக்கப்படவில்லை. விவசாயிகள் கூலி வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் போன்ற திட்டங்களை கொண்டு வந்து, விவசாயத்தை அழித்து எட்டு வழி சாலை போடும் திட்டமும் கொண்டுவரப்படுகிறது. விவசாயத்தை பற்றி கேள்விப்படும் எந்த ஒரு செய்தியும் நல்ல வகையில் அமையவில்லை.
25 லட்சம் ஏக்கர் நிலம் காவிரியை நம்பி உள்ளது. 19 மாவட்ட குடிநீர் தேவையை காவிரி தீர்த்து வைக்கிறது. எனவே, இதுபோன்ற கருத்தரங்குகள் தஞ்சையில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என்று விவசாய அணி நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
1971ஆம் ஆண்டில், முதல் முறையாக காவிரி பிரச்சினைக்காக வழக்கு போட்டதும் கருணாநிதிதான். காவிரி தீர்ப்பாயத்தை அப்போது பிரதமராக இருந்த விபி.சிங் அமைத்துக் கொடுத்தார். தற்போது, மத்தியில் உள்ள பாஜக அரசு கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டைதான், எடுத்துள்ளது.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை, மத்திய அரசு தட்டிக் கேட்பது கிடையாது. தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்த கருத்தரங்கத்தின் மூலமாக நான் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்க உள்ளேன். ரிசர்வ் வங்கியிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கக் கூடிய நிதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டசபைக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வோம். வேளாண்மை காப்போம், விவசாயிகளை காப்போம், காவிரியைக் காப்போம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.