தஞ்சை அருகே லாரியை முந்த முயன்ற பஸ்.. மின் கம்பத்தில் உரசியதால் 5 பேர் பலி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது, அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
மன்னார்குடி - தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி - கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.. கல்லணையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இன்று மதியம் வரகூர் வந்த போது லாரியை முந்த முயன்றதால், பேருந்து இடது புறமாகச் சென்றதில் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது, சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி மீது பேருந்தின் மேற்கூரையில் உரசியது. இதனால், பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த நடராஜன், மாரியப்பன், கல்யாணராமன், கவிதா, முனியம்மாள் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.