பாஜகவுடன் த.மா.கா.இணையாது... வெறும் வதந்தி... வாசன் விளக்கம்
தஞ்சாவூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைக்கவுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தியே என்றும், அதுபோல் எந்த எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள த.மா.கா. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் சென்னையிலும், திருச்சியிலும் அந்த மாநாட்டை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
விக்ரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக கூறினார். திமுகவின் பொய்பிரச்சாரத்தை மக்கள் முறியடித்துள்ளதாக வாசன் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக காரணமே திமுக தான் என்றும், திமுக வழக்கால் தான் உள்ளாட்சித் தேர்தல் கால தாமதமாவதாகவும் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த அதிமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், ஓரிரு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கைவிட்டு போன 'ஆடுகளம்'... ஹரியானாவில் காங்கிரஸை கடைசி நாட்களில் 'காபந்து' செய்த சோனியா
பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் உலா வரும் செய்தி பொய் என்றும், அது போன்ற வதந்திகளை நம்ப தேவையில்லை எனவும் தெரிவித்தார்.