காவிரிக்கு மாற்று காவிரியே.. கோதாவரியை இணைத்தாலும் பிரச்சனை தீராது.. பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்
மன்னார்குடி: ஒகேனக்கல் அருகே ராசிமணலில் அணை கட்டினால் தான், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளதாக கூறினார். கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனதை நினைவுகூர்ந்த அவர், இந்த ஆண்டாவது ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
காவிரிக்கு மாற்று காவிரி தானே தவிர வேறு அல்ல என்று குறிப்பிட்ட பாண்டியன், கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து தமிழக எல்லையான ராசிமணலில் அணை கட்டுவது ஒன்று தான் தீர்வாக அமையும்.
எனவே கோதாவரியை இணைப்பதன் மூலமாக காவிரி பிரச்சனை தீர்ந்துவிடப் போவதில்லை. கோதாவரி இணைப்பு என்ற பெயரில் நிதின் கட்கரி தனது பொறுப்பை தட்டி கழிக்கவே பார்ப்பதாக சாடினார்.
காவிரியில் தண்ணீரை பெற்று தர வேண்டிய அதே நேரத்தில், ராசிமணலில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஒத்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
ராசிமணலில் அணை கட்டுவதற்கும், கோதாவரி இணைப்பிற்கும் ,காவிரி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக கூறினார். கோதாவரி இணைப்பால் காவிரி மற்றும் டெல்டா மாவட்டங்களின் பாசன பிரச்சனைகள் தீராது என்றார்.