விபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்
தஞ்சாவூர்: விபத்தில் ஒரு காலை இழந்தவர் தனது வழக்கு ஆவணங்களை வழக்கறிஞரிடம் கொடுப்பதற்காக தஞ்சையில் இருந்து மதுரை வரை சைக்கிளில் சென்றுள்ளார்.
பொது போக்குவரத்து இல்லாததால் சுமார் 165 கி.மீ. தூரத்தை 10 மணி நேரம் சைக்கிளில் பயணித்து அடைந்துள்ளார் இவர்.
நீதிமன்றம் மூலம் இழப்பீடுத் தொகை பெறுவதற்கான நடைமுறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் சிரமம் பார்க்காமல் அவர் இவ்வாறு சென்றுள்ளார்.
கண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி
விபத்தில் கால் இழப்பு
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 1994-ம் ஆண்டு தனது 14-வது வயதில் தஞ்சையில் இருந்து வேன் மூலம் நண்பர்களுடன் மதுரைக்கு கோவிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி தனது ஒரு காலை இழந்துவிட்டார். விபத்து மதுரை அருகே நடைபெற்றதால் விபத்து இழப்பீடு கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராஜா. அந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்றும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
சட்டப்பணிகள்
இந்நிலையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தனது வழக்கை மேல்முறையீடு செய்த ராஜா, வழக்கு தொடர்பாக அவ்வப்போது தஞ்சையில் இருந்து மதுரைக்கு சென்று வந்துள்ளார். தற்போது பொது போக்குவரத்து முடங்கிய நிலையில் வழக்கறிஞர் கேட்ட வழக்கு ஆவணம் ஒன்றை அவரிடம் கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் ராஜா. இதையடுத்து சைக்கிளில் செல்வது என முடிவெடுத்த அவர் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு 10 மணி நேரம் பயணித்து மதுரையை அடைந்துள்ளார்.
தவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் பலரும் தவித்து வருகின்றனர். இதனிடையே 4 மாதங்களுக்கு மேல் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், பேருந்துகளை எதிர்நோக்காமல் தங்களிடம் உள்ள இரு சக்கர வாகனம், சைக்கிள், கார் மூலமே இப்போது பயணிக்க பழகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிரமம் இல்லை
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜா, ஊரடங்கு ஜுலை 31-ம் தேதியுடன் முடிவடைந்து பேருந்துகள் இயக்கப்படும் என நினைத்ததாகவும், ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்ற ஐயத்தால் சைக்கிளில் மதுரை சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், சைக்கிள் ஓட்டுவதை பொறுத்தவரை தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும், ஏற்கனவே சைக்கிளில் பல இடங்களுக்கு சென்ற அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.