இந்து தீவிரவாதம் என்பது சூடான ஐஸ் கிரீம் போன்றது.. பொருந்தாத வாக்கியம்.. இலகணேசன் நச்!
தஞ்சை: இந்து தீவிரவாதம் என்பது சூடான ஐஸ்கிரீம் போன்ற பொருந்தாத வாக்கியம் என இல கணேசன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்க சென்ற கமல் இந்துக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் ஆங்காங்கே போராட்டங்களும் கொடும்பாவி எரிப்புகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கமலின் பேச்சுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம்.. விமர்சனம் இல்லாமல் வளர முடியாது... சீமான் பேச்சு
இந்துவை இழிவுபடுத்தி..
அப்போது அவர் பேசியதாவது, மக்கள்நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மகாத்மா காந்தி நல்ல இந்து என்று சொல்லி இருந்தால் அது சரியான வார்த்தை. ஆனால் இதற்கு எதிர்மறையாக உள்ள ஒருவரை பார்த்து இந்து என கூறுவது என்பது திட்டமிட்ட ரீதியில் கோட்சேவை பற்றி சொல்வது அல்ல இந்துவை இழிவுபடுத்தி சொல்வது.
சந்தர்ப்பவாத பேச்சு
அரவக்குறிச்சி மக்களுக்கும் மகாத்மா காந்தி கொலைக்கும் சம்பந்தமில்லை. கமல் ஒரு குழப்பவாதி, அரவக்குறிச்சியில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக உள்ள காரணத்தால் அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக சந்தர்ப்பவாத பேச்சு பேசியுள்ளார்.
சூடான ஐஸ்கிரீம்
யார்மனது புண்பட்டாலும் பரவாயில்லை என்று பேசியிருக்கிறார். இந்து தீவிரவாதம் என்பது சூடான ஐஸ்கிரிம் போன்றது. பொருந்தாத வாக்கியம்.
ஏழு பேர் விடுதலை
திருநாவுகரசு போன்றவர்கள் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார்கள். ஏழு பேர் விடுதலை என்பதில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை தனியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. உச்சநீதிமன்ற குறிப்பு வந்த பிறகு ஆளுநர் விரைவாக முடிவு செய்ய வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு இல கணேசன் தெரிவித்தார்.