இரவோடு இரவாக திடீரென திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை.. தஞ்சையில் பரபரப்பு
தஞ்சை ரயில் நிலையம் அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை: ராத்திரியோடு ராத்திரியா தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஜெயலலிதா சிலையை யார் அமைத்தது என்பதுதான் இப்போதைக்கு உச்சக்கட்ட குழப்பமே!!
கருணாநிதி சிலை திறப்பு சமாச்சாரம் நாடறிந்த ஒன்று. சிலை உருவான விதத்திலிருந்து, திறப்பு விழா வரை ஒவ்வொரு கட்டத்தையும் நாம் பார்த்துகொண்டேதான் இருந்தோம்.
ஆனால் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலை பக்கத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாநகராட்சி இடத்தில் 1995-ஆம் ஆண்டிலிருந்தே எம்ஜிஆர் உருவச் சிலை உள்ளது. இதை திறந்து வைத்தது அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாதான்.
சிலைக்கு மாலை
இந்நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு வலது புறம் 7 அடி உயரமுள்ள பீடத்தில் 7 அடி உயர ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இதை யார் செய்தார்கள் என்றே தெரியவில்லையாம். இன்று காலை அந்த பக்கமாக சென்றவர்கள் இதை கவனித்து உள்ளனர். ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
மின்னுகிறது சிலை
ஒரு வாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலையை சுற்றி ஏதோ வேலை நடந்துகொண்டிருந்ததாம். அதனால் எம்ஜிஆர் சிலையைத்தான் புதுப்பிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நினைத்துகொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றுதான் ரூ.7 லட்சம் மதிப்பில் ஜெயலலிதா சிலையை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. தங்க நிறத்தால் ஜெயலலிதா சிலை மின்னுகிறது. பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கிறது. எனினும் இந்த சிலையை ஏன் பொதுமக்கள் முன்னிலையில் அதிமுகவினர் திறந்து வைக்கவில்லை என தெரியவில்லை.
பல்வேறு விமர்சனங்கள்
ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது. ஆனால் அந்த சிலையை பார்த்தால் ஜெயலலிதா போல இல்லை என்று கூறி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு வேறு சிலையை அங்கும் வைக்கவில்லை, வேறு எங்கும் வைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை.
இரவோடு இரவாக சிலை
இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குழப்பமாக உள்ளது. அதோடு சிலையை அமைத்ததும் யார் என்றும் தெரியாத நிலையில், எதற்காக இந்த சிலையை இரவோடு இரவாக அமைக்க வேண்டும்? என்பதும் புரியவில்லை. இது சம்பந்தமாக மாநகராட்சி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி இருக்கிறதாம்.
மழுப்பல் பதில்
சிலை அமைக்க வேண்டுமென்றால் மாநகராட்சி ஆணையர்தானே அனுமதி தர வேண்டும். அவரே சிலை குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லி உள்ளது மேலும் குழப்பதைதான் ஏற்படுத்துகிறது. காவல்துறையும் இதை பற்றி தெரியாது என்று சொல்கிறார்களாம். உள்ளூர் அதிமுகவினரும் மழுப்பலாகவே பதில் அளிக்கிறார்களாம்.
உரிய அனுமதி இல்லையா?
எனவே அதிகாரப்பூர்வமாக திறக்கப்படாமல் சத்தமின்றி திறக்கப்பட்டதன் பின்னணி என்னவாக இருக்கும் என்றும், ஒருவேளை உரிய அனுமதி ஏதும் வழங்கப்படாமல் திறக்கப்பட்டுள்ளதோ என்றும் கூறப்படுகிறது. அதனால் திடுதிப்பென்று ராத்திரி நேரத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளதன் காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.