ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்
தஞ்சை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்ற செய்தியால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.
இதனால் இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சாகுபடி பொய்த்து போகும் சூழல் உள்ளதால், விவசாயிகள் செய்வதறியாது கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனத்துக்காக வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இதனையடுத்து இருக்கும் நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி செய்ய நாற்றங்கால் அமைக்கும் பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு போதிய நீர் இருப்பு இல்லாததால், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 47.44 அடி நீர்இருப்பு உள்ளது.
எனினும் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அடுத்து வரும் வாரங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கு நீர் திறப்பது பற்றி யோசிக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு நீர்வழங்கல் துறை, கர்நாடக மாநில நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலை பற்றிய புள்ளிவிவரங்களை , தமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் நம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை.
சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் கிடைக்காததற்கு ப.சிதம்பரம்தான் காரணம்.. மறைமுகமாக சொன்ன ராகுல்
அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது 23.15% நீர் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கபினியில் 35.93% நீர் உள்ளது. ஹரங்கி மற்றும் ஹேமாவதி நீர்த்தேக்கங்களில் முறையே18.33% மற்றும் 3.12% மட்டுமே நீர்இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பருவமழை இன்னும் சரிவர துவங்காததால் நாம் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் வரை காத்திருந்து பார்க்கலாம். அந்த சமயத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் அதிகமாகும் பட்சத்தில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிரந்து நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக காவேரி டெல்டா விவசாயிகள் நல சங்கத்தை சேர்ந்த மன்னார்குடி ரங்கநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.