காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. தமிழக விவசாயிகள் ஆவேசம்
Recommended Video
தஞ்சை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க மறுக்கும் கர்நாடக மாநில அரசை கலைக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, கர்நாடக அரசு 9.2 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.
காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதை கண்காணிக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 அமைப்புகளிலும் 4 மாநிலங்களும் தங்கள் சார்பாக தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன.
கடந்த மாதம் 28-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டெல்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகள், குறுவை சாகுபடிக்கு ஏதுவாக காவிரியிலிருந்து ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம், தங்கள் மாநிலத்தில் தற்போதுதான் பருவமழை துவங்கியுள்ளது.
எனவே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க முடியாது என கூறியது. கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக அரசு, தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என கூறிவிட்டது.
இதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள். கர்நாடகத்திடமிருந்து உரிய தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் மத்திய அரசும், இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
டெல்டா பகுதி விளைநிலங்கள் குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளதாக கூறிய விவசாயிகள், இதற்காக தண்ணீரை நாங்கள் பிச்சையாக கேட்கவில்லை. எங்களின் உரிமையாக தான் கர்நாடகத்திடம் கேட்கிறோம் என ஆவேசமாக தெரிவித்தனர். மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை காற்றில் பறக்க விடும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோபமாக கூறியுள்ளனர்.
கர்நாடகம் உரிய நீரை தராவிட்டால் டெல்டா பகுதி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கும் என வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்க இயலாத சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டபடி கர்நாடகம் தண்ணீரை தர முடியாது என கைவிரித்திருப்பது, டெல்டா பாசன விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.