வறட்சியில் தவிக்கும் தமிழகம்.. 5 மாதங்களாகியும் நடைபெறாத காவிரி ஆணைய கூட்டம்.. விவசாயிகள் வேதனை
தஞ்சை: 5 மாதங்கள் கடந்தும் இந்த ஆண்டுக்கான காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறாததற்கு, தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் வறண்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் வறட்சியில் சிக்கியுள்ளன. இந்த சூழலில் காவிரி ஆணையத்தின் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியும், அதே போல ஒழுங்காற்று குழுவின் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதியும் கடைசியாக நடந்துள்ளது
நடப்பாண்டிற்கான காவிரி ஆணைய மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காவிரி ஆணையம் சரியாக செயல்படுகிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்துள்ளனர். ஒருபோக சம்பா சாகுபடியும் பல ஆண்டுகள் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் கர்நாடகாவில் பெய்த கடும் மழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிவதை நேரில் பார்த்ததாகவும் தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆனால் கர்நாடக அரசோ, தங்களது ஏரிகளிலும், அணைகளிலும் தண்ணீர் குறைவாக இருப்பதாக தொடர்ந்து கணக்கு காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி.. தெருக்கூத்து.. ஸ்டாலின், கேசிஆர் சந்திப்பு குறித்து தமிழிசை நக்கல்
இந்த சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் ஒரு சம்பிரதாய அமைப்பாக செயல்படுவது தங்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மாதந்தோறுமோ அல்லது தேவைக்கேற்பவோ கூட்டப்பட வேண்டிய மேலாண்மை ஆணைய கூட்டம், 5 மாதங்களை கடந்தும் இன்னும் நடத்தப்படாததற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். மேட்டுர் அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறுவதற்கான எவ்வித நடவடிக்கையையும் ஆணையம் எடுத்துள்ளதாக தகவல் இல்லை
இதனால் குறுவை சாகுபடிக்கு நடப்பாண்டாவது உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது மேலும் தமிழக எல்லையான ராசிமணலில் அணையை கட்டி, தமிழகம் கர்நாடகம் என 2 மாநிலங்களும் பயன்படுத்தி கொள்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு உருவாக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.