கர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்
தஞ்சை: உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டிக்காமல் ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து ஏமாற்றி வரும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்து விட்டு, புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என, கர்நாடகத்திற்கு காவிரி மேலண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கனவே கடந்த மாதம் 28-ம் தேதி கூடிய காவிரி மேலாண்மை ஆணையம், ஜூன் மாதத்திற்குரிய 9 டிஎம்சி தண்ணீரை தமிழக்திற்கு திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் மேற்கண்ட உத்தரவையே கர்நாடக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
இது குறித்து காவிரி மேலாண்மை தலைவர் மசூத் உசைனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர் கர்நாடகாவில் உரிய பருவமழை துவங்கி பெய்தால், அம்மாநிலம் தண்ணீரை திறந்துவிட்டு விடும் என்றார்.
அவரின் இந்த பதில் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு நேரப்பணியாக மசூத் உசைன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரியுள்ளனர்.
தற்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பதில் புதிதாக வலுவான அதிகாரம் பெற்ற புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், காவிரியில் கலந்த சாக்கடை கழிவு நீரை கணக்கில் எடுத்து 1.8 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறுகிறது என புகார் தெரிவித்தார் மேலும் பேசிய அவர் கடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்டதையே கர்நாடகம் தற்போது வரை செயல்படுத்தவில்லை
இது பற்றி சிறு கூச்சம் கூட இல்லாமல் ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடும் என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது
மசூத் உசைன் தலைமையிலான காவிரிஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு இவை இரண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகின்றன எனவே மேற்கண்ட இரு அமைப்புகளையும் கலைத்து விட்டு, முழுநேர பணியாகப் புதிய காவிரி மேலாண்மை ஆணையம், புதிய ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
அதே போல இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி நீரை திறக்கும் விவகாரத்தில் ஆணையம் கர்நாடக மாநிலத்திற்கு வெறும் உத்தரவு மட்டும் பிறப்பிக்கக் கூடாது. கர்நாடகத்தில் உள்ள அணையைத் திறக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.