கும்பகோணத்தில் கந்துவட்டி தகராறு.. கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது
கும்பகோணம்: கும்பகோணத்தில் கந்துவட்டி தகராறில் கல்லூரி மாணவர் அருண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22).
கல்லூரியில் பிஇ படித்து வந்த இவர் தந்தைக்கு உதவியாக மளிகை கடையிலும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபார நிமித்தமாகவும் முன்னாள் பா.ம.க பிரமுகர்களான பாலகுரு மற்றும் அவரின் சகோதரரான செந்தில் சில லட்சங்களை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
கடன் தொகை
ஆனால் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் வட்டியாகவே பல லட்சங்களை இதுவரை சிவசுப்பிரமணியன் கொடுத்து வந்தாராம். மளிகை கடையில் வியாபாரம் சரியாக போகாததால் அசலை கட்ட முடியாமல் சிவசுப்பிரமணியம் அவதிப்பட்டு வந்துள்ளார். அந்த அவரை, கட்டாயம் அசலை செலுத்துமாறு முன்னாள் பாமக நிர்வாகி பாலகுரு மிரட்டி வந்தாராம்.
மீண்டும் மிரட்டல்
இதனால் மனம் உடைந்த சிவசுப்பிரமணியன் கடந்த 26-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு அவரின் மகன் அருண் மற்றும் அவரின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிவசுப்பிரமணியத்திடம் மீண்டும் பாலகுரு, செந்தில் தரப்பினர் பணம் கேட்டுள்ளனர்.
வாய்தகராறு
அப்போது அவர்கள், வீட்டில் உள்ள பெண்களை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண், எங்களிடம் கந்து வட்டி வாங்கி அசலுக்கு மேல் வட்டியை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் எங்களால் கடன் தொகையை செலுத்த முடியாது என அருண் கூறியிருக்கிறார். இதையடுத்து பாலகுரு தரப்புக்கும் அருணுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
கடையில் கொலை
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் மளிகைக் கடையில் அருண் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் அரிவாளுடன் மளிகைக் கடைக்குள் புகுந்து அருணைக் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பினர். இந்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்ததது.
உயிரிழந்த அருண்
இதனிடையே படுகாயம் அடைந்த அருணை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அருண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரித்த கும்பகோணம் போலீசார், செந்தில்(49), ஜீவா(30), வெங்கடேஷ்(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.