65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்!
கும்பகோணத்தில் முதியவரை கொன்ற பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்
தஞ்சாவூர்: மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்ய சொன்ன மேனேஜரை பாஜக நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒரு பாஜக பிரமுகரே கொலையை செய்ததுதான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் கோபாலன்... 65 வயதாகிறது.. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்.. பெங்களூருவில் உள்ள ஶ்ரீஶ்ரீ108 அபினவ உத்தராதி மடத்தின் மேனேஜராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார்.
இந்த மடத்துக்கு சொந்தமான கடையில் சரவணன் என்பவரும் தையல் கடை நடத்தி வந்தார்.. சரவணனுக்கு 43 வயதாகிறது.. நகர பாஜக தலைவராக உள்ளார். இவர் பல வருஷமாக வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.. அதனால் கடையை காலி செய்யும்படி கோபாலன் சொல்லி உள்ளார்.. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது.
முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், "இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்" என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, "கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே" என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், "அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே" என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
கொரோனா: 2 நாட்களில் ஹாஸ்டலை காலி செய்யச் சொல்லும் சென்னை ஐஐடி - தவிக்கும் மாணவர்கள்
இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டு வாசலில் கோபாலன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே வந்த சரவணன் திடீரென கத்தியால் கோபாலனை குத்திவிட்டு ஓடினார்.. இதில் சுருண்டு விழுந்து கோபாலன் இறந்துவிட்டார்.. இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், பாஜக நிர்வாகி சரவணனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி ஒரு கொலையை செய்தது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது!