வயசு 22.. பேரு சிவசங்கரி.. பிரசிடென்ட் போஸ்ட்டுக்கு நிக்கறேன்.. சேவையே என் ஆசை.. இளம்வேட்பாளர் நறுக்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 வயது பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்
கும்பகோணம்: "என் பேரு சிவசங்கரி.. 22 வயசு.. பிரசிடென்ட் போஸ்ட்டுக்கு நிக்கறேன்.. ஜெயிச்சு வந்தால், என் தொகுதி மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன்" என்கிறார் முதன்முதலாக ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடும் பெண் வேட்பாளர்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.. நேற்றைய தினம் அதாவது 27 மற்றும் வரும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
எப்பவும் இல்லாமல் இந்த முறை தேர்தல் மிக மிக வித்தியாசமாக நடக்கிறது.. வேட்பாளர்களுக்குள் கடுமையான போட்டி நடந்தது.. அந்த வகையில் இளம் வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.
குறிப்பாக கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தின் மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் நாகர்ஜூன். இவருக்கு வயசு 21தான் ஆகிறது!
அதேபோல, கும்பகோணத்தில் பருத்திக்குடியில் முதன் முதலாக 22 வயது இளம் பெண் ஊராட்சி மன்ற தலைவராக சிவசங்கரி என்பவர் போட்டியிடுகின்றார். இவர் செய்தியாளர்களிடம் பூரிப்புடன் சொன்ன விஷயம் இதுதான்:
"என் பேரு சிவசங்கரி.. வயசு 22.. நான் பிகாம் படிச்சிருக்கேன்.. பருத்திக்குடி ஊராட்சியில பிரசிடென்ட் போஸ்ட்டுக்கு நிக்கறேன்.. மக்கள் எல்லாரும் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்காங்க.. கோரிக்கை எல்லாம் என்கிட்ட சொல்லி இருக்காங்க.. நான் ஜெயித்து வந்தவுடனேயே எல்லாத்தையும் அவங்களுக்கு செய்து தர்றேன்னு சொல்லி இருக்கேன்.
எனக்கு கூடவே இருந்து தைரியம் குடுத்து, சப்போர்ட் பண்ணினது என் அப்பாதான்.. நாங்க போய் ஒவ்வொருத்தரையும் பார்க்கும்போது, ஒவ்வொரு கோரிக்கையை சொன்னாங்க.. பஸ் வசதி இல்லை, மெடிக்கல் வசதி இல்லை.. முதியோர் ஊக்கதொகை வரலை..ன்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாங்க.. நான் வெற்றி பெற்றால், கண்டிப்பா எல்லா கோரிக்கையும் நிறைவேற்றுவேன்னு சொன்னேன்.. எப்பவுமே மக்களுக்கு சேவை செய்வது ஒன்னுதான் என்னுடைய குறிக்கோள்" என்கிறார் சிவசங்கரி!