"1000" தாமரை மொட்டுக்களே.. கும்பகோணத்தில் ராத்திரியை கலக்கிய வதந்தி.. கிளப்பி விட்டது யாருப்பா!
வதந்தி காரணமாக வீட்டு வாசலில் பெண்கள் தாமரை கோலம் போட்டனர்.
Recommended Video
கும்பகோணம்: இது யார் கிளப்பிவிட்ட வதந்தின்னு தெரியாது.. ஒரு விசித்திரமான சம்பவம் கும்பகோணத்தில் நடந்திருக்கிறது!
இந்த முறை தாமரையை தமிழகத்தில் மலர வைத்தே தீருவது என்று பாஜக கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது. இதற்காக எத்தனையோ புது புது ஐடியாக்களை கையாண்டு வருகிறது.
இப்படி யுக்திகள் ஒருபுறம் நடக்கிறது என்றால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனோ, கோயில்களுக்கு சென்று பால்குடம் ஏந்தி வேண்டுதலில் ஈடுபட்டு வருகிறார்.
மீண்டும் மோடி
இந்நிலையில் நேற்று முன்தினம், தமிழிசை ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், "மீண்டும் நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாமரை ஆட்சி மலர்ந்திட, நாளை தமிழகம் முழுவதும் நாம் அனைவரின் வீட்டிலும் மாலை 06:00 மணியிலிருந்து தாமரைதீபத்தை ஏற்றி மீண்டும் மோடி அவர்கள் ஆட்சியமைய வழிபடுவோம். #மீண்டும் மோடி வேண்டும் மோடி" என்று பதிவிட்டிருந்தார். இப்படி சொல்லி, தன் விருகம்பாக்கம் வீட்டிலும் விளக்கு ஏற்றி வைத்தார்.
1000 ரூபாய்
ஆனால் இந்த விஷயம் எப்படியோ வேறு விதமாக திரிந்துவிட்டது. குறிப்பாக கும்பகோணத்தில், "வீட்டு வாசலில் தாமரைக்கோலம் போட்டு, அகல் விளக்கு ஏற்றினால் ரூ.1000 வழங்கப்படும் அல்லது அந்த தொகைக்கு பரிசு பொருள் வழங்கப்படும்" என்ற வதந்தி பரவ தொடங்கியது.
தாமரைக்கோலம்
அதன்படி ஆனக்காரபாளையம் பகுதியில் பெண்கள் வீட்டு வாசலில் தாமரைக் கோலத்தை வரைய ஆரம்பித்தனர். அதன் நடுவே அகல் விளக்கையும் ஏற்றி வைத்து மக்கள் காத்து கிடந்தனர். ஆனால் ராத்திரி ஆகியும் ஒருத்தரும் வந்து 1000 ரூபாயோ அல்லது பரிசுப்பொருளோ எதுவும் தரவில்லை. இதனால் பரபரப்பு அடங்கி ஏமாற்றமே மிஞ்சியது.
அகல் விளக்கு
ஆனால் இதை பற்றி அந்த பகுதி பாஜக நிர்வாகிகளை கேட்டால், எல்லாமே வதந்தி என்றும் அப்படி யாரும் ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என்றனர். நெடுநேரம் காத்திருந்து விட்டு தங்கள் இல்லத்தின் முன் தாமரை கோலத்தை வரைந்தனர். அதன் நடுவில் அகல் விளக்கையும் ஏற்றி வைத்தனர்.
ஏமாற்றமே மிஞ்சியது
ஆனால் இரவில் நெடுநேரம் வரை விழித்திருந்து பணம் கிடைக்குமென்று காத்திருந்த மக்களுக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது யார் கிளப்பி விட்டது என்று தெரியாது, ஆனால் நேற்று மாலை முதல் கும்பகோணேமே அகல் விளக்கால் ஜொலித்து கொண்டிருந்தது.