ஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை
தஞ்சை: தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வரும் மனுக்களை அதிகாரிகள் படிப்பதே இல்லை என, மாநில தகவல் ஆணையர் பிரதீப்குமார் கவலை தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act) இந்திய அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட சட்டம்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும். தகவல் பெறும் உரிமை சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர் 2005-ம் ஆண்டு மே 11-ம் தேதி மக்களவையிலும், அதற்கு அடுத்த நாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
ஜூன் 21-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு, இறுதியாக 2005-ம் ஆண்டிலேயே அக்டோபர் 12-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. நாட்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக அனைத்திற்கும் மாநிலத்திற்கும் இச்சட்டம் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர் பிரதீப்குமார் தஞ்சையில் அனைத்து அரசு அலுவலர்கள் அடங்கிய கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்கள் கேட்கும் விவரங்களை விரைந்து தர வேண்டும். அப்படி செயல்படும் பட்சத்தில் மக்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தை நாட வேண்டிய அவசியமே இல்லை.
இச்சட்டம் என்பது இன்னொரு சுதந்திரமாக கருதப்படுகிறது. ஒருவர் 25 கேள்விகள் வரை கேட்கலாம் அதெற்கல்லாம் பதிலளிக்க வேண்டியது அரசு அலுவலர்களின் கடமை. ஒருவர் தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால், 30 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலரின் பெயர், பதவி, தொலைபேசி எண் கட்டாயம் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் வழங்கும் மனுக்களை, அதிகாரிகள் படித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல அதிகாரிகள் மனுக்களை படித்து பார்ப்பதே இல்லை. அதே போல அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் இல்லை என்ற பதிலை அளிக்க கூடாது.
அந்த ஆவணங்களை எப்பாடுபட்டாவது தேடி கண்டறிந்து, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசு அலுவலகங்களுக்கு உள்ளது. பெரும்பாலும் வருவாய்துறை தொடர்பான மனுக்கள் தான் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிகம் வருகின்றன. நிலம், நீர்நிலைகளை பாதுகாத்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், யாரும் தயங்க தேவையில்லை என அறிவுரை கூறினார் அதிகாரி பிரதீப்குமார்.