இறைவனை வணங்காத நாள் தான் எனக்கு கெட்ட நாள்... அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
தஞ்சை: இறைவனை வணங்காத நாள் தான் தனக்கு கெட்ட நாள் என்றும், மற்றபடி எந்தநாளும் தனக்கு கெட்ட நாள் இல்லை எனவும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். பதவி பறிபோய்விடும் என்ற செண்டிமென்ட் காரணமாக தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் பல விஐபிக்கள் கலந்துகொள்ளாத நிலையில் இவர் துணிச்சலாக கலந்துகொண்டார். உள்ளூர் அமைச்சர் துரைக்கண்ணு, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் போன்றோர் கூட குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளாமல் சென்னையிலேயே இருந்துவிட்டனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட அமைச்சரான ஓ.எஸ்.மணியன் வழக்கமான கட்சி வேட்டியை தவிர்த்து காவி வேட்டி அணிந்தவாறு தஞ்சை பெரியகோவிலுக்கு வந்திருந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பாக வரவேற்ற அதிகாரிகள் விஐபி கேலரியில் அமரவைத்தனர். அங்கு பல இருக்கைகள் காலியாகவே இருந்தன. காரணம் பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு ஆகாது என்ற கூற்று பல வருடங்களாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் காவி வேட்டி அணிந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செயல்படாத நிர்வாகிகள் ஒதுங்கி கொள்ளுங்கள்... கடுகடுத்த ராமதாஸ்
அதற்கு பதிலளித்த அவர், இதுவரை தான் 7 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளதாகவும், குடமுழுக்கு விழாக்களுக்கு வழக்கமாக காவி வேட்டி அணிந்து கலந்துகொள்வதை தாம் வழக்கமாக கொண்டுள்ளதாகவும், செண்டிமெண்ட் காரணமாக தஞ்சை பெரியகோவிலுக்கு காவிவேட்டி அணிந்து வரவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார். மேலும், தன்னை பொறுத்தவரை இறைவனை வணங்காத நாள் தான் தனக்கு கெட்ட நாள் என்றார். இதனால் தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதில் தனக்கு ஒரு பயமும் இல்லை எனக் கூறினார்.