மோடி இனி பிரதமர் ஆகவே முடியாது.. ராகுல்தான் பிரதமர்.. அடித்து சொல்கிறேன்.. ஸ்டாலின் முழக்கம்!
மோடியால் இனி பிரதமர் ஆகவே முடியாது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: மோடியால் இனி பிரதமர் ஆகவே முடியாது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தற்போது சமூக நீதி மாநாட்டு நடந்து கொண்டு இருக்கிறது. திராவிட கழகம் சார்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதன் தோழமை கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். திமுக சார்பில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
பிரதமர் நேரு எதிர்த்தார்
ஸ்டாலின் தனது பேச்சில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிற்கு அப்போதே பிரதமர் நேரு எதிர்ப்பு தெரிவித்தார். பொருளாதார அளவுகோல் என்பது மாறிவிடும். அதனால்தான் அன்றே பொருளாதார அளவுகோல் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஏற்கனவே இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமுறை தோல்வியை தழுவி இருக்கிறது.
நீதிபதி சின்னப்ப ரெட்டி
முன்னாள் நீதிபதி சின்னப்ப ரெட்டி இது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை, இது சமூக நீதி திட்டம் என்றார். ஆனால் பாஜக கொண்டு வந்திருப்பது சமூக நீதியை குழி தோண்டி புதைப்பது. மோடி 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்ததால் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். ஏதாவது தந்திரம் செய்து லோக்சபா தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார்.
விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் எங்கள் விவசாயிகள் போராடிய போது மோடி எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லியில் நிர்வாண போராட்டம் கூட நடத்தினார்கள். ஆனால் மோடி ஒருவரையும் கூட அழைத்து பேசவில்லை. எல்லா விவசாயிகளை அவர் அவமானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினார்.
கருணாநிதி இலவசம்
ஆனால் விவசாயிகளுக்காக கருணாநிதி ஆட்சியில் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில்தான் அப்போதே அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களை திமுக தள்ளுபடி செய்தது. மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அப்படியே விவசாயிகள் தள்ளுபடி செய்தார். இதனால் அதிமுகவினர்தான் அதிக பலன் பெற்றார்கள்
15 வருடம் பின்னோக்கி
மக்களிடம் மோடி பணத்தை பிடிங்கிவிட்டு, இப்போது விவசாயிகளுக்கு கொடுப்பதாக நடிக்கிறார். மோடியால் இந்தியா 15 வருடம் பின்னோக்கி சென்றுள்ளது. மோடி இனி பிரதமர் இருக்கையில் அமரவே முடியாது. ராகுல் காந்திதான் பிரதமர் ஆவார்: அடித்து சொல்கிறேன். தமிழகம்தான் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
ராகுல்தான்
கார்ப்ரேட், ஊழல், மதம் இந்த மூன்றையும் வைத்துதான் மோடி ஆட்சியை நடத்துகிறார். கலவரங்களை தூண்டி, மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மோடி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். ஆனால் மோடியால் இனி எப்போதும் பிரதமர் ஆகவே முடியாது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.