அரசியல்வாதிகளுக்கு ஆகாத தஞ்சை பெரிய கோவில் - கும்பாபிஷேகத்திற்கு வருவாரா முதல்வர்
சென்னை: ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அசராமல் கம்பீரமாக நிற்கிறது தஞ்சாவூர் பெரிய கோவில். கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இன்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில். உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த இந்த கோவிலை பார்த்து பிரமித்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந்திய அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கோவிலுக்குள் நுழைய அச்சமாக இருக்கிறது. காரணம் கடந்த 50 ஆண்டுகாலமாக நிலவும் நம்பிக்கைதான். இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பெரிய கோவிலைப்பற்றியும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கும் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இக்கோவிலானது தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் என்றைக்குமே பிடித்தமான கோவிலாக இருப்பதில்லை. அதனால்தான் இக்கோவிலை முறையாக பராமரிக்காமல் பாராமுகமாகவே இருந்தனர்.
கடந்த 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, யாகசாலை பூஜையின்போது பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்தனர். இதன்பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி ஆண்டும் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தாமல் கிடப்பில் போட்டிருந்தனர். இத்தனை ஆண்டு காலம் கழித்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேதி குறித்துள்ளனர்.
கும்பாபிஷேகத்திற்கு வருவார்களா?
கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதை கணக்கில் கொண்டுதான் 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தை நடத்தியது அ.தி.மு.க. அரசு. அதை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு கொண்டாடினர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசியல் சென்டிமென்ட்
யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னம் என, அறிவிக்கப்பட்டு, உலக அளவில், பிரசித்த பெற்றது, தஞ்சை பெரிய கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்குள் கேரளந்தான் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் வழியாக, மூலவர் பெருவுடையாருக்கு எதிரே உள்ள படி வழியாக வந்து தரிசிப்பவர், பிரபலமானவராக இருந்தால், அவர் பதவி அல்லது உயிர் பறிபோகும் என்பது சென்டிமென்ட். இங்கு வந்து சென்ற பின், அவர்கள் உயரிய பொறுப்பை, ருசித்ததில்லை. இப்படியொரு சென்டிமென்ட் காலம் காலமாக இருந்து வருகிறது.
எம்ஜிஆர் கருணாநிதி
இந்த பட்டியலில், முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில்சிங், எஸ்.டி.சர்மா, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கருணாநிதி என, பலரும் அடங்குவர். ராஜராஜசோழனும் கருணாநிதிதியும் 1976ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது.
கருணாநிதி மோதல்
நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை" என்று காரணம் கூறியது. அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்கு புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள். புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?" என்று கருணாநிதி தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
எமர்ஜென்சி காலம்
இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கருணாநிதி அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் அதாவது 1976 ஜனவரி 31ம் தேதிதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது என்கின்றனர் வரலாறு அறிந்தவர்கள். எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராவும் தோற்றுப் போய், அவரது ஆட்சியும் போனது. பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டது முதல் நிகழ்ச்சி என்கிறார்கள் ஊர் மக்கள்.
சோக நிகழ்வுகள்
ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போதுதான் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார். அதன் பிறகு சில நாட்களில் முதல்வரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போதைய இந்திரா காந்தியின் எதிர்பார்க்காத சோக மரணமும் நிகழ்ந்தது.
பறிபோன பதவிகள்
கோவிலுக்குள் போனால் ஒன்று பதவி பறிபோகும் இல்லாவிட்டால் உயிர் போகும் என்ற அச்சத்தையும் மோசமான சென்டிமென்ட்டையும் உடைக்கிறேன் என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழா கொண்டாடினார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த விழாவில், ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உட்பட தி.மு.க.,வின் பலரும் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அத்தனைபேரின் பதவியும் பறிபோனது. திகார் சிறை வரைக்கு சென்று வந்தனர் கனிமொழியும் ஆ. ராசாவும்.
அரியணை ஏற முடியலையே
தஞ்சை பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழாவில் பெரிய கோவிலின் உட்புறம், நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 பேர் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை காண, முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மேலே குறிப்பிட்ட பிரதான வழியில் வராமல், ராஜராஜசோழன் சிலை வழியாக, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
அதிமுகவின் நிலை
சென்டிமென்ட்டை உடைப்பதாக விழா நடத்தியவர்களுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே பெரியகோவில் சென்டிமென்ட் வேலை செய்ய ஆரம்பித்தது.
அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கட்டிலில் அமரமுடியவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளபோது பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் முதல்வரும், துணை முதல்வர்களும் பங்கேற்பார்களா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.