ஒரத்தநாடு அருகே விளையாடிய குழந்தைகளை தாக்கிய கணவன்.. தடுக்க வந்த மனைவி படுகொலை
தஞ்சை:ஒரத்தநாடு அருகே சாப்பிடும் போது விளையாடிய குழந்தைகளை தாக்க முற்பட்ட போது மனைவி தடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழ உளுர் கிரமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. அவரது மனைவி ரூபா. அவர்களுக்கு விஸ்வா (6)விஸ்வேஷ் (4) இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கும், அவரது மனைவி ரூபாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று மதியம் தனது குழந்தைகளுக்கு ரூபா சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தைகள் குறும்புத்தனமாக விளையாடியதை மணிகண்டன் தட்டி கேட்டு குழந்தைகளை தாக்கியுள்ளார்.
அதை தடுக்க வந்த மனைவி ரூபாவை வீட்டில் உள்ள அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் ரூபாவின் சடலத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.