எனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் "இது" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்!
நெல்லை சப் கலெக்டர் திருமணம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது
தஞ்சாவூர்: "உடம்பை பார்த்துக்குங்க.." கிராம மக்களிடம் சப் கலெக்டர் சிவகுருபிரபாகரன்அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான்.. "எனக்கு கல்யாணத்துக்கு வரதட்சணை வேணும்.. ஆனால் 100 சவரன் நகையும் வேணாம்.. கார் வேணாம்.. இது ஒன்னு போதும்" என்று சப் கலெக்டர் விடுத்த கோரிக்கையை கண்டு கிராம மக்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு நின்றனர்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து - கனகா தம்பதி.. இவர்களது மகன் சிவகுருபிரபாகரன்.. 30 வயதாகிறது.
ஐஐடியில் எம்டெக் முடித்த சிவகுரு பிரபாகரனுக்கு ஐஏஎஸ் கனவு இருந்தது.. அதனால்தான் எங்கெங்கோ வேலை கிடைத்தும் போகாமல், ஐஏஎஸ் ஒன்றே குறியாக இருந்தார்.
2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று ஐஏஸ் ஆனார்.. இப்போது நெல்லை மாவட்ட சப்-கலெக்டராக வேலை பார்த்து வருகிறார்..
வெறும் சப்-கலெக்டராக மட்டுமில்லாமல், அப்துல் கலாம் பெயரில் டாக்டர் ஏபிஜே கிராம வளர்ச்சி குழு என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். ஒட்டங்காடு ஏரியைத் தானே முன் நின்று ஊர்மக்கள் உதவியுடன் தூர் வாரினார். ஆனால், கிராம மக்களிடம் உடல் நலம் குறித்த போதுமான விழிப்புணர்வுகள் இல்லாமல் இருப்பதை கண்டு வேதனைப்பட்டார்.
அதனால் 15 மருத்துவர்கள் கொண்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம் ஒன்றையும் கிராம மக்களுக்காக நடத்தினார். வாரம் ஒருமுறையாவது கிராமத்துக்கு வந்து விவசாயிகள் உட்பட எல்லாரையும் பார்த்துவிட்டு நலன் விசாரிப்பாராம்.. யாரை பார்த்தாலும் உடம்பை பார்த்துக்குங்க.. என்றுதான் சொல்வாராம்.. இந்நிலையில் மகனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது சிவகுருபிரபாகரன் பெற்றோரிடம் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டாராம்.
100 பவுன் நகை, கார் எதுவும் வரதட்சணை வேணாம்.. கல்யாண பெண் டாக்டராக இருக்க வேண்டும்.. நம்ம கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்க்கணும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதன்படியே பெண் தேடி வந்தபோதுதான், சிவகுரு பிரபாகரன் போட்ட இந்த கண்டிஷன் கிருஷ்ணபாரதிக்கு பிடித்துவிட்டது.. இவர்தான் மணப்பெண்.. சென்னையில் டாக்டராக உள்ளார்.. உடனடியாக கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார்.
ஏனென்றால் கிருஷ்ண பாரதிக்கும் இப்படி கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏற்கனவே எண்ணம் இருந்துள்ளது.. இப்போது ஓகே சொல்லிவிடவும் கடந்த 26-ம் தேதி இவர்களின் கல்யாணம் நடந்தது.. எந்த கிராம மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பெண் கேட்டாரோ, அதே கிராம மக்கள் முன்னிலையில்தான் இந்த கல்யாணம் நடந்தது.. தங்களுக்காக சிவகுருபிரபாகரனும் கிருஷ்ண பாரதியும் எடுத்த முடிவை நம்பி உருகிவிட்டனர்.. மொத்தமாக திரண்டு வந்து மனசார வாழ்த்தி விட்டு சென்றனர்!