தென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு
ராமலிங்கம் கொலையின் முக்கிய குற்றவாளி வீட்டில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது
கும்பகோணம்: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகமது ஷாலிக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் தென்காசியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை கண்டித்து பாஜக, இந்துமக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தேசிய புலனாய்வு அமைப்பு
ஆனால் இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது. அதனால் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.
எர்ணாகுளம்
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணப்பாறை பகுதியை சேர்ந்த முகமது பாரூக் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டையும் சோதனை நடத்தினர். அதேபோல, திருவிடைமருதூர் அடுத்த விநாயகன் தோப்பைச் சேர்ந்த மைதீன் அகமது சாலி என்ற 51 வயது நபரை கடந்த வாரம் எர்ணாகுளத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
சதி திட்டம்
கைது செய்யப்பட்ட சாலிக்கும், ராமலிங்கத்தைக் கொன்ற கும்பலுக்கும் இடையே பெரும் நெருக்கம் இருப்பதாக என்ஐஏ சந்தேகித்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை நடத்திய பல்வேறு சதி ஆலோசனைக் கூட்டங்களில் சாலியும் கலந்து கொண்டதாகவும், அந்தக் கூட்டங்களில்தான் ராமலிங்கத்தைக் கொல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் என்ஐஏ உறுதியாக தெரிவித்திருந்தது.
தென்காசி வீடு
இந்நிலையில், அகமது ஷாலிக்கின் சொந்த ஊர் தென்காசி ஆகும். அதனால் தென்காசி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்காரணமாக, சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சோதனையில் பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
மனைவி பேட்டி
இந்தசோதனை குறித்து ஷாலி மனைவி ஆஷியாபானு சொல்லும்போது, "என்னை மிரட்டி எனது வழக்கறிஞருக்கு கூட தகவல் சொல்ல விடாமல் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து நிறைய ஆவணங்களை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அது போலியானவை. அவர்களே கொண்டு வந்து வைத்துவிட்டு சோதனை என்ற பெயரில் எடுத்து செல்கிறார்கள்" என்றார்.