ஒரத்தநாடு பகுதியில் 20 கிராமங்கள் கடும் பாதிப்பு.. 4 அமைச்சர்களை முற்றுகையிட்டு மக்கள் கொந்தளிப்பு
Recommended Video
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை வழங்கப்படவில்லை என கூறி ஆய்வு செய்ய வந்த 4 அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஜா புயல் கரையை கடந்த போது ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் சுழன்று சுழன்று அடித்த காற்று, விடாமல் பெய்த பேய் மழை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உண்ண உணவு, குடிக்க குடிநீர், மின்சாரம் இல்லாமல் ஏராளமான கிராமங்கள் அல்லல்படுகின்றன. இதனால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடி கிராமத்தில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உணவு இல்லை மக்கள் வேதனையில் உள்ளனர். ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 20 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆய்வு பணிக்காக அங்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், எம்பி வைத்திலிங்கமும் வந்தனர்.
உடனே ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் எம்பி வைத்திலிங்கத்தின் காரையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அமைச்சர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி அவர்களை அழைத்து சென்றனர்.