காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்! பி.ஆர்.பாண்டியன் திடீர் போர்க்கொடி!
தஞ்சை; காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இனி அனுமதிக்கமாட்டோம் எனக் கூறி அதிர வைத்துள்ளார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டக்கோரி கர்நாடகாவில் காங்கிரஸ் நடைபயணம் சென்றதன் எதிரொலியாக அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
கர்நாடக காங்கிரஸின் எடுத்தோம் கவிழ்த்தோம் நடவடிக்கைகளால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது.
மேடையிலேயே பேசிய ஐஸ்வர்யா.. 2 மாதத்தில் தலைகீழாக மாறிய உறவு.. தனுஷுக்கு சென்ற புகார்? பின்னணி
மேகதாது அணை
திருவாரூரில் இருந்து மேகதாது அணை நோக்கி நீதி கேட்டு பயணம் தொடங்கியுள்ள தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு தஞ்சையில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பியதுடன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூட்டுச்சதி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், மேகதாது அணை எதிர்ப்பு விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் காங்கிரசும்-பாஜகவும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு காவிரியின் குறுக்கே அணையை கட்ட முயற்சிப்பதாக தெரிவித்தார். மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கைவிடாவிட்டால் ராகுல், பிரியங்கா, சோனியா ஆகியோர் தமிழகம் வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கடும் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியை இனி தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட நிலைதான் ராகுல் காந்தி சோனியா காந்தி பிரியங்கா காந்திக்கு ஏற்படுமென மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடங்கியுள்ள பேரணியில் பிஆர் பாண்டியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இனி அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பெரும் தலைவலி
மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கட்டும் கரிசனத்தால் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பலருக்கும் இந்த விவகாரம் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமை கவலையுடன் பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.