பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி.. இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை.. தாய், பாட்டி தற்கொலை
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் பாட்டியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான நிலையில் வீட்டில் வளர்த்து வந்த இரு நாய்களும் விஷம் கொடுத்ததில் அவை இறந்துள்ளது தெரியவந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தை சேர்ந்தவர் சாந்தி (50). இவரது மகள் துளசி (21). இவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர்களது வீட்டில் 2 நாய்களும் காவலுக்காக இருந்தன. இந்நிலையில் இவர்களது வீடு நேற்று முழுவதும் வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
பட்டுக்கோட்டை
கிராம நிர்வாக அலுவலர் சுமதி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்க்கையில், 2 பெண் குழந்தைகளுக்கும், 2 நாய்களுக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு துளசியும் அவரது அம்மா சாந்தியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
4 பேரின் உடல்கள்
இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சாந்தி, துளசி மற்றும் துளசியின் 2 பெண் குழந்தைகள் உள்பட 4 பேரின் உடலையும் கைப்பற்றி போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
அதேபோல் 2 நாய்களையும் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்துள்ளனர். தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். எனினும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
இந்த சம்பவத்தில் தற்கொலை கடிதங்கள் ஏதும் சிக்கவில்லை. ஒரு வேளை இவர்கள் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டனரா, இல்லை வேறு ஏதாவது காரணமா என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். துளசியின் கணவர் மற்றும் தந்தை குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.