தீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு!
தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்றும் தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முதல் நாள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் மது அருந்துவரை தவிர்த்து மது இல்லாத தீபாவளியாக மக்கள் கொண்டாட வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது போன்று எந்த அரசு செய்தாலும் ஏற்கவே இயலாது.
காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக நாம் கொண்டாட வேண்டும். தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முதல் நாள் மதுக்கடைகளை மூட வேண்டும்.
தீபாவளியைப் போன்றே கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பண்டிகையின் போதும் மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும். மக்கள் மதுவை புறக்கணிக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகளில் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.