தென்னைகளை வந்து எடுத்துட்டு போங்க.. பட்டுக்கோட்டை விவசாயிகள் வைக்கும் உருக்கமான கோரிக்கை!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மக்கள் வந்து எடுத்து செல்லும்படி பட்டுக்கோட்டை மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மக்கள் வந்து எடுத்து செல்லும்படி பட்டுக்கோட்டை மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அங்கிருக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்தினால் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று பட்டுக்கோட்டை மக்கள் கூறியுள்ளனர்.
கஜா புயலால் தமிழகம் முழக்க பல மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தில்லங்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தென்னை விவசாயியுமான சுப்ரமணியன் தங்கள் ஊரில் உள்ள தென்னை விவசாயிகளின் நிலை குறித்து பேசியுள்ளார். அவர்களின் நிலையை சரி செய்ய அவர் தீர்வும் வழங்கியுள்ளார்.
மரம் விழுந்தது
இதுகுறித்து பேசியுள்ள அவர், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் மரம் விழுந்துள்ளது. பட்டுக்கோட்டையில் மக்கள் எல்லோரும் தென்னையை நம்பித்தான் இருந்தோம். எல்லாம் இப்போது விழுந்துவிட்டது. 1980ல் இருந்த நிலைமைக்கு சென்றுவிட்டோம். மீண்டும் மண்ணை மீட்டால்தான் நாங்கள் சரியாக முடியும். மீண்டும் தென்னை நடுவதை பற்றி யோசிக்கத்தான் வேண்டும்.
இளநீர்களை
இதனால் இங்கு இருக்கும் இளநீர்களை, தென்னையை மக்கள் எடுத்து சென்றால் நலம். மக்கள் இங்கு வந்து இளநீர்களை எடுத்து செல்ல வேண்டும். இதை எடுத்து சென்றால்தான் எங்களுக்கு சந்தோசம். அதில் வருத்தம் இல்லை. வெளிமாவட்டத்தில் இருப்பவர்களுக்கு கட்டிட வேலைக்கு தென்னை தேவைப்பட்டால் தாராளமாக தருகிறோம். இதை நீங்கள் எடுத்து சென்றால் போதும்.
இடம்
இந்த இடம் காலியாக வேண்டும். எங்களால் யாரிடமும் கடன் வாங்க முடியாது. கடன் கொடுக்க யாரிடமும் பணம் இல்லை. இங்கு நாங்கள் எல்லோரும் மொத்தமாக பாதிக்கப்பட்டு உள்ளோம். தென்னையில் மீண்டும் முதலீடு செய்ய முடியாது. இந்த மரத்தை யாராவது எடுத்து சென்றால் நல்லது. எங்கள் உழைப்பை இயற்கை அழித்துவிட்டது. நாங்கள் இதிலிருந்து மீண்டு வருவோம்.
நிறைய கஷ்டம்
எங்களுக்கு நிறைய கஷ்டம் வந்தாலும் மக்கள் போன் செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட்டு வருகிறோம். எத்தனை தென்னை தேவைப்பட்டாலும், எங்கள் ஊரில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள். உடனே வாருங்கள். இதுதான் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் முதலீடு. நாங்கள் மீண்டு வர இதுதான் உதவும்.
நிறைய கடன்
நாங்கள் ஊதியம் கொடுக்க கூட வழியில்லாமல் இருக்கிறோம். நாங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டோம். கடன் மட்டும்தான் இருக்கிறது, கடனை கொடுக்காமல் நாங்கள் சாக மாட்டோம். உங்களிடம் நாங்கள் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. தயவு செய்து அழியும் நிலையில் உள்ள இளநீர்களை எடுத்து செல்லுங்கள், என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.