அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி
தஞ்சை: அமெரிக்காவிலிருந்து துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழகம் வந்த பிறகு அதிமுகவில் இணைவேன் என அமமுகவின் முன்னாள் நிர்வாகி வ. புகழேந்தி தெரிவித்தார்.
அமமுகவின் பொதுச் செயலாளர் தினகரனுக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டனர். இதையடுத்து அமமுகவின் நிர்வாகிகள் அடங்கிய பட்டியலில் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியின் பெயர் விடுபட்டிருந்தது.
இதனால் புகழேந்தி அக்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு கூட்டம் நடத்தியது, அவர் அதிமுகவில் இணைவார் என்பதை உறுதி செய்தது.
19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
அதிமுகவில் இணைவேன்
மேலும் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய புகழேந்தி விரைவில் அதிமுகவில் இணைவேன் என்றார். இந்த நிலையில் புகழேந்தி தலைமையில் தஞ்சை மண்டல அமமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்கியும் மின்தடையால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்புகளை இந்த அரசு எப்படி அளிக்கிறதோ அச்சத்தில் இருந்த போது அண்டை மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களையும் பணியாளர்களையும் வரவழைத்து உலகமே வியக்கும் வகையில் ஆணைகளைப் பிறப்பித்து நிறைவேற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியையும் பாராட்டுகிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுயேச்சைகள்
தினகரன் புதிய கட்சி துவங்குவதாக கூறி இரண்டு வருடங்களாகியும் கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற முடியாமல் திணறி வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் 22 சட்டமன்றத் தேர்தலில் நம்மை சுயேச்சைகளாக போட்டியிட வைத்து தோல்வியடையச் செய்தார்.
கலைக்கப்படுகிறது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் இயங்கும் இந்த கம்பெனி முழுவதுமாக கலைக்கப்படுகிறது என்கிற முக்கிய தீர்மானம் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என புகழேந்தி கூறினார்.
ஓபிஎஸ் தமிழகம் வந்ததும்
அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகம் திரும்பியதும் தான் அதிமுகவில் இணைவேன் என புகழேந்தி தெரிவித்துள்ளார். அப்போது அவருடன் அமமுக அதிருப்தி நிர்வாகிகளும் இணைவார்கள் என தெரிவித்தார்.