தஞ்சை ராஜராஜசோழன் 1035 சதய விழாவில் தமிழில் பாராயணம் : பெருவுடையாருக்கு மகா அபிஷேகம்
தஞ்சை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1035 சதய விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான ராஜராஜன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்: மாமன்னர் ராஜ ராஜசோழனின் 1035வது சதயவிழாவை முன்னிட்டு ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பெருவுடையாருக்கு 42 வகையான பொருட்களால் அர்ச்சனை செய்ப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழில் பாராயணம் பாடப்பட்டது.
Recommended Video
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று 1035வது சதய விழா நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கமாக இன்று காலை பெரிய கோயிலில் மங்கள இசையோடு விழா தொடங்கியது. தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து கோயிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தைப் பாடினர்.
தஞ்சை பெரிய கோவிலை தமிழர்களின் கட்டட கலைக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமும் அரியணை ஏறிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கொரோனா அச்சம் காரணமாக அரசு விதிமுறைப்படி இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே முக்கிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழன் சிலைகள் உள்ள இடம் மின்னொளி அலங்காரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோயிலின் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் , சதய விழாக்குழு தலைவர் துரை. திருஞானம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தர்மபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குஜராத்திலிருந்து மீட்டு வரப்பட்டு கோயிலின் அர்த்த மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலை முன்பாக புனித நீர் அடங்கிய குடங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் கோயில் வளாகத்தில் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஆகியோரது சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகாரம் வீதி உலா நடைபெறுகிறது.
ராஜராஜசோழன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலையை அணிவிக்க கூடிய நிகழ்வு நடைபெற இருப்பதால் தஞ்சை பெரிய கோவில் மற்றும் சோழன் சிலை இருக்கக்கூடிய பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு அரசியல் அமைப்பினரும் தமிழில் பெருவுடையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில் தேவாரம் திருவாசகம் பாடப்பட்டது.
தஞ்சாவூரில் சதய விழா ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும். பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒரு நாள் நிகழ்வுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோயிலில் இன்று பக்தர்கள் குறைந்த அளவே தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். சதய விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் சார்பாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தஞ்சாவூர் நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.