தஞ்சை அழகி குளத்திற்கு வந்த காவிரி நீர் - ஆடி பெருக்கு கொண்டாட தயார்
தஞ்சாவூரில் மீட்டெடுக்கப்பட்ட அழகி குளத்திற்கு காவிரி தண்ணீர் வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளக்கரையை சுற்றிலும் 27 வகையான மரங்களை நட்டு பூங்காவனமாக மாற்றி அழகியை மேலும் அழகுபடுத்தியுள்
தஞ்சாவூர்: அழகி குளம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட பின்னர் காவிரி நீரால் நிரம்பத்தொடங்கியுள்ளது தஞ்சைவாசிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. நீரால் நிரம்பும் குளத்தை சுற்றிலும் 27 வகையான மரத்தை நட்டு பராமரித்து வருகின்றனர். அழகி குளத்தை அழகான குளமாக மாற்றியதோடு ஆனந்தமாக ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாட முடிவு செய்திருக்கின்றனர்.
தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியான பர்மா பஜார் அருகே விஜயா தியேட்டர் பின்புறம் உள்ளது அழகிகுளம். இந்த குளம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்திலே கட்டப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த குளம் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளாலும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதாலும் இருந்த சுவடே இல்லாமல் மறைந்து போனது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு அழகி குளம் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. மூன்று ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் தற்போது பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஆண்டு குளத்திற்கு காவிரி நீரும் வந்து நிரம்பியுள்ளதால் தஞ்சைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
வெளிவராத ரகசியங்கள்.. தப்பித்த தலைகள்.. "கேங்ஸ்டர்" விகாஸ் துபே என்கவுண்டரும் மறைக்கப்படும் மர்மமும்
நீர் நிலைகளை பராமரித்த ராஜராஜன்
ராஜராஜன் சோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தவர். அவரது ஆட்சி காலத்தில்தான் சிவகங்கை குளம், அய்யன் குளம், அழகி குளம் என 50க்கும் மேற்பட்ட குளங்களை அமைத்துள்ளார். இந்தக் குளங்கள் அனைத்தும் தஞ்சாவூரின் நகர் பகுதியிலேயே அமைந்துள்ளன.
தாகம் தீர்த்த பாட்டி
இந்த அழகி குளம் என்பது தனிச் சிறப்பு பெற்றது. இந்தப் பகுதியில் வசித்த சொக்கியம்மாள் என்ற மூதாட்டி சிவத்தொண்டு செய்து வந்தார். சொக்கனுக்கு தொண்டாற்றுவதில் சொக்கம்மாள் பாட்டிக்கு அத்தனை பிரியம். சொக்கி என்றால் என்றால் அழகி என்று பொருள். அவர்தான் தஞ்சை பெரிய கோயில் கட்டும் போது வேலை செய்பவர்களின் களைப்பும் தாகமும் தீர்வதற்கு இந்தக் குளத்திலிருந்து தண்ணீரும், நீர் மோரும் குடிப்பதற்குக் கொடுத்துள்ளார்.
கோபுர உச்சியில் பாட்டி கொடுத்த கல்
அழகி பாட்டி தன்னுடைய வீட்டில் இருந்து பெரிய கல்லைக் கொடுத்து கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட ராஜராஜ சோழன் பாட்டியை மனதார பாராட்டியதுடன் அவர் கொடுத்த கல்லில் தாமரை பொறித்து கோபுரத்தின் உச்சியில் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
அழகிக்கு அழகிய குளம்
ராஜராஜ சோழன் அழகி பாட்டியின் சிவத் தொண்டில் திருப்தியடைந்ததால் அவருக்குத் தீர்வையின்றி அழகி குளத்தைப் பதிவு செய்து கொடுத்தார் என்கிறது வரலாறு. இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னர் காலத்து குளமான அழகி குளம் காலப்போக்கில் மறைந்து குப்பை மேடாக காட்சி அளித்தது. நாளடைவில் நீர் வழிப்பாதை அடைபட்டுவிட்டது.
அழகி குளம் சீரமைப்பு
அழகி குளத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாம்பாட்டித் தெரு, கவாஸ்காரத் தெரு மக்கள் இணைந்து துார்வாரி சுத்தம் செய்தனர். மேலும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் குளத்தைச் சுற்றிப் பாதை அமைத்தும், பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகளும், குளத்தைச் சுற்றி மரக்கன்றுகளும் வைத்தனர்.கடந்த ஆண்டு இந்தக் குளத்தில் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.
Recommended Video
பொங்கி வந்த காவிரி நீர்
இந்த ஆண்டு கல்லணைக் கால்வாயில் இருந்து காவிரி நீரைக் கொண்டு வர முடிவு செய்து, 1,400 அடி நீளத்துக்குக் குழாய்களைப் புதைத்து, குளத்துக்குத் தண்ணீர் வர ஏற்பாடு செய்தனர். இதனால், குளத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு களைகட்டும் என்றே எதிர்பார்க்கலாம்.