ரீவைண்ட் 2020: சுகோய் 30 போர் விமானம் முதல் ராஜராஜ சோழன் சதயவிழா வரை தஞ்சாவூர் டாப் 10
2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சில முக்கியமான டாப் 10 நிகழ்வுகளை சற்றே திரும்பி பார்க்கலாம்.
தஞ்சாவூர்: சில நினைவுகள் மறக்க முடியாதவை, அவற்றை மனதில் மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கும் போது அவை மகிழ்ச்சியை அதிகரிக்கும். செய்திகளும், சம்பவங்களும் அப்படித்தான் அவற்றை மறுபடியும் திரும்பி நினைத்து பார்க்கும் போது சில நினைவுகள் சந்தோஷத்தையும்,சில நினைவுகள் சோகத்தையும் ஏற்படும். 2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சில முக்கியமான டாப் 10 நிகழ்வுகளை சற்றே திரும்பி பார்க்கலாம்.
அரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு
தஞ்சாவூர் விமானப்படைதளம் சுகோய் 30
சுகோய்-30 ரக போர் விமானம் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்தபோது, அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின்ராவத் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூரில் 1940ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விமானப்படை தளம் இரண்டாம் உலகப் போரின்போது செயல்பாட்டில் இருந்தது. இங்கிருந்து இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த விமானப்படை தளம் பயன்படுத்தப்படவில்லை. அதன்பின், இந்த தளத்தை சீரமைத்து 1988ஆம் ஆண்டில் சிறிய பயணிகள் விமானம் சென்னைக்கு இயக்கப்பட்டது. பயணிகள் வருகை மிகவும் குறைந்ததைத் தொடர்ந்து நாளடைவில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய விமானப்படையில் ‘டைகா் ஷார்க்ஸ்' என்ற 222-வது போர் விமானப்படை பிரிவு தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 எண்ணிக்கையிலான சுகோய்-30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும்.
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழிலிலும் சமஸ்கிருதத்திலும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தைக் காண வெளியூர்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர்.
டாக்டர் பெண்ணை மணக்க வித்தியாச வரதட்சணை கேட்ட சப் கலெக்டர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன். நெலலையில் சப்-கலெக்டராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர் பெற்றோர். ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன்.
மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும், இவர் கேட்ட நூதன வரதட்சணையை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். தான் மணந்து கொள்ளும் மருத்துவர் வாரத்தில் 2 நாட்கள் தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்தில் உள்ள மக்களுக்கும், சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே இவர் கேட்ட வரதட்சணை. இதை மகிழ்ச்சியுடன் டாக்டர் கிருஷ்ணபாரதி ஏற்றுக் கொண்டதால் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.
கனி.. நீ சாகலேடா.. 7 பேர் உசுருல வாழ்ந்துட்டு இருப்பே
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கனிமொழி... 25, தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக வேலை செய்து வந்தார். கடந்த 27-ம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு போய் கொண்டிருந்தார்.. அப்போது, தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினார். கனிமொழி மூளைச்சாவு அடைந்து விடவே அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.
கல்லீரல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கனிமொழியின் கண்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
உசுறு முக்கியம் சோறு முக்கியம்
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஊர் சுற்றியவர்களைப் பார்த்து காவல்துறை அதிகாரி, இந்த நேரத்தில் ஊர் சுற்றலாமா? முட்டை, கருவாடு முக்கியமா? என்று கேட்டார். முதலில் சோறு முக்கியம். உசுரோடு இருந்து கொள்வோம் அப்புறம் நிறைய சாப்பிடுவோம் என்று அட்வைஸ் செய்தார். உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பி வைத்த வீடியோ வைரலானது.
கொரோனா காலத்தில் முன்மாதிரி திருமணம்
கொரோனா காலத்தில் சமூக விலகலுடன் திருமணம் நடைபெற்றது. சொந்த பந்தங்கள் வாழ்த்த விருந்து களைகட்ட நடந்த திருமணங்கள் 2020ஆம் ஆண்டு மாறிப்போனது. தஞ்சாவூரில் நடந்த திருணத்தில் 5 பேர் சொந்தங்கள் பங்கேற்றனர். பிற சொந்தங்கள் ஜூம் செயலி மூலம் பார்த்து ரசித்தனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை பிடிபட்ட 10 பாம்புகள்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை பராமரிப்பு சரியில்லை என்று நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டினார். அந்த மருத்துவமனையின் சுற்றுப்புற பகுதியில் 10 பாம்புகள் பிடிபட்டது வைரலானது. தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, கண் கிசிக்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. பழமையான இந்த மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் புதர்கள் மண்டி இருப்பதால், விஷத்தன்மையுடைய பாம்புகள் வருவதாக ஊழியர்கள், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் மத்தியில் புகார் எழுந்தது. பாம்புகளை பிடிப்பதற்காக அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பேரில் அறக்கட்டளையைச் சேர்ந்த சதீஷ்குமார், குலோத்துங்கன், வின்சென்ட், சரவணன் உள்பட 10 பேர் சென்றனர். அங்கு 5 கண்ணாடி விரியன் பாம்புகள், 2 சாரைப் பாம்புகள், 3 சிறு வகைப் பாம்புகள் என மொத்தம் 10 பாம்புகளைப் பிடித்தனர்.
பயங்கர சத்தம் அதிர்ச்சி
தஞ்சாவூர் திடீரென பயணங்கர சத்தம் கேட்டதால் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். விமானப்படை தளத்தில் சோனிக் ரக விமானங்கள் வந்ததால் சத்தம் கேட்டதாக சொன்னாலும் அதை பற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை. நாச்சியார் கோவிலில் இருந்து தஞ்சாவூர் வரை சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி முதியவர் வைரலானார். அதிகாலை 3 மணிக்கு சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இதே போல சீர் வரிசையுடன் டாபர்மேன் நாய் அபி என்கிற அபிராமிக்கு வளைகாப்பு நடத்தினர். மஞ்சள் குங்குமம் வைத்து வாழ்த்தினர்.
1035வது சதயவிழா
தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035 வது சதய விழா ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனை அறியாதவர்கள் யாரும் இல்லை. ஆளுமை, அழகு, கம்பீரம் என இதிகாச வரலாறுகளில் இவரிமண் புகழை படிக்கும் போதே நம் புருவம் உயரும். மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
வழக்கமாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் சதயவிழா கொரோனா காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெற்றது.