துவங்கியது ராஜ ராஜ சோழன் 1035வது சதய விழா.. விழாக்கோலம் பூண்டது தஞ்சை
தஞ்சை: தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1035 சதய விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான ராஜராஜன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Recommended Video
தஞ்சை பெரிய கோவிலை தமிழர்களின் கட்டட கலைக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமும், அரியணை ஏறிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
கொரோனா அச்சம் காரணமாக அரசு விதிமுறைப்படி இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே முக்கிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது. சதய விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பக்தர்களில், கோவில் வளாகத்திற்குள் 10 வயதுக்குள் உள்ளவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துதான் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா மற்றும் அரசு சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க கூடிய நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பெருவுடையாருக்கு 42 திவ்ய அபிஷேகங்களும், மாலை சுவாமி வீதி உலாவும் பெரிய கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது.
இன்று ராஜராஜசோழன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலையை அணிவிக்க கூடிய நிகழ்வு நடைபெற இருப்பதால் தஞ்சை பெரிய கோவில் மற்றும் சோழன் சிலை இருக்கக்கூடிய பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு அரசியல் அமைப்பினரும் பெருவுடையாருக்கு, தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன. அதனடிப்படையில் தேவாரம் திருவாசகம் பாடி நிகழ்வு தொடங்கப்பட்டது.